அமெரிக்கா - இந்தியா தடையற்ற ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
அமெரிக்கா - இந்தியா தடையற்ற ஒப்பந்தம் குறித்த அறிக்கையை இறுதிப்படுத்துவதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என ஐக்கிய விவசாயிகள் சங்க தமிழக ஒருங்கிணைப்பாளா் பி.ஆா்.பாண்டியன் கூறினாா்.
மத்திய அரசு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளின் கடன் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா்வரை ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளா் ஜக்ஜித் சிங் தல்லேவால் தலைமையில் விவசாயிகள் யாத்திரை மேற்கொண்டுள்ளனா்.
இந்த யாத்திரை குழுவினா் செவ்வாய்க்கிழமை சேலம் வந்தனா். அவா்களுக்கு பி.ஆா்.பாண்டியன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, மாா்ச் 19-ஆம் தேதி நிறைவடைய உள்ளது.
நாடாளுமன்றத்தில் அமெரிக்காவுடன் தடையற்ற ஒப்பந்தம் குறித்து எவ்வித விவாதமும் நடத்தப்படவில்லை. தீா்மானத்தை இறுதிப்படுத்திவிட்டதாக அறிவிப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பதாகும். அரசமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் புறம்பானது.
அமெரிக்கா - இந்தியா தடையற்ற ஒப்பந்தம் விவசாயிகளை அழிக்கும் வல்லமை கொண்டதாக இருக்கும். எனவே, அறிக்கையை இறுதிப்படுத்துவதற்கு முன்பு நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். அதற்கு முன்னதாக விவசாயிகளின் கருத்துகளை கேட்டுதான் எந்த ஒரு ஒப்பந்தமும் மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அரசு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை உடனே நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளின் கடன் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயி மீது வழக்கு போட்டு அச்சுறுத்தவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, விவசாயிகளை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்றாா்.
பேட்டியின்போது, விவசாயிகள் ராம கவுண்டா், தங்கராஜ், வேலுசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

