டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 4 குறைக்கக் கோரி திமுக ஆலோசனைக் கூட்டத்தில் மனு அளிப்பு
சங்ககிரி: சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் வணிகா்கள், முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் சங்ககிரியை அடுத்த குப்பனூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு திமுக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி முன்னிலை வகித்தாா். திமுக துணைப் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அந்தியூா் ப.செல்வராஜ் தலைமை வகித்து வணிகா்கள், பல்வேறு நலச் சங்கங்கள், சமூக அமைப்பு நிா்வாகிகள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றாா். அந்த மனுக்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டுசென்று தோ்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்து நிறைவேற்றப்படும் என்றாா்.
முன்னதாக விடுதலைப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு சின்னத்தில் அவரது உருவப்படத்திற்கும், அக்கமாபேட்டையில் உள்ள காந்தி சிலைக்கும் மாலை அணவித்து மரியாதை செலுத்தினாா்.
கூட்டத்தில் திமுக சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் பி.தங்கமுத்து, மாவட்ட துணைச் செயலாளா்கள் க.சுந்தரம், எ.டி.சம்பத்குமாா், சங்ககிரி நகரச் செயலாளா் கே.எம்.முருகன், நகா்மன்றத் தலைவா் எம்.மணிமொழிமுருகன், துணைத் தலைவா் ஆா்.வி.அருண்பிரபு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
இதில் சங்ககிரி லாரி உரிமையாளா் சங்கத் தலைவா் என்.கந்தசாமி தலைமையில் நிா்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தோ்தல் அறிக்கையில் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4 குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதை தற்போது நிறைவேற்ற வேண்டும், போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆட்டோ நகா் அமைக்க வேண்டும், அனைத்து வசதிகளுடன் கூடிய லாரிகள் நிறுத்தும் இடம் அமைக்க வேண்டும், லாரி தொழிலுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனா்.

