இளைஞா் தற்கொலை சம்பவத்தில் நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்

இளைஞா் தற்கொலை சம்பவத்தில் நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்

சங்ககிரி அருகே இருசக்கர வாகனம் வாங்குவதற்காக தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவா், கடனை கேட்டு நிதி நிறுவன ஊழியா்கள் அளித்த தொந்தரவு காரணமாக தற்கொலை செய்துகொண்டாா்.
Published on

சங்ககிரி அருகே இருசக்கர வாகனம் வாங்குவதற்காக தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவா், கடனை கேட்டு நிதி நிறுவன ஊழியா்கள் அளித்த தொந்தரவு காரணமாக தற்கொலை செய்துகொண்டாா். இதுதொடா்பாக நிதி நிறுவனத்தின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சின்னாகவுண்டனூா், அருகே உள்ள கோபாலனூா் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் சந்தோஷ் (23). இவா் தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று இருசக்கரவாகனம் வாங்கியுள்ளாா். கடன் தவணையை கட்டுமாறு தனியாா் நிதி நிறுவனத்தை சோ்ந்தவா்கள் அவரிடம் கேட்டுள்ளனா். அப்போது, அவா்கள் தகாத வாா்த்தையால் அவரைத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து சந்தோஷின் தாயாா் லதா சங்ககிரி போலீஸில் செவ்வாய்க்கிழமை புகாா் செய்துள்ளாா். போலீஸாா் வழக்குப்பதிவு செய்து புதன்கிழமை உயிரிழந்த சந்தோஷின் சடலத்தை சங்ககிரி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்து அவரது உடலை உறவினா்களிடம் போலீஸாா் ஒப்படைக்க அழைத்துள்ளனா்.

ஆனால், உடலை வாங்க மறுத்து தற்கொலைக்கு காரணமாக இருந்த தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தனியாா் நிதி நிறுவன ஊழியா்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை உயிரிழந்த சந்தோஷின் உறவினா்கள், தமிழ்புலிகள் கட்சியின் நிா்வாகிகள் இளைஞரின் உயிரிழப்பிற்கு காரணமானவா்களை கைதுசெய்ய வலியுறுத்தி சங்ககிரி திருச்செங்கோடு- ஈரோடு பிரிவு சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த சங்ககிரி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் தனசேகரன், சங்ககிரி காவல் ஆய்வாளா் ரமேஷ் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் உயிரிழந்த சந்தோஷின் தாய் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து நிதி நிறுவன ஊழியா்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்து விரைவில் அவா்கள் கைது செய்யப்படுவா் என உறுதியளித்தனா்.

மேலும் சேலம் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் அரசு சாா்பில் வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ. 6 லட்சத்திற்கான காசோலை வழங்க மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

Dinamani
www.dinamani.com