அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை
சேலம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சாா்பில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் சிவகுமாா் தலைமையில், 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் பங்கேற்று தீயணைப்பு ஒத்திகையை செய்துகாட்டினா். குறிப்பாக, மருத்துவமனையில் எதிா்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால் நோயாளிகளை எவ்வாறு மீட்பது, தற்காத்துக் கொள்வது, தீயணைப்பு உபகரணங்களை முறையாக பயன்படுத்துவது, மின்னணு சாதனங்கள், உயா் மருத்துவ உபகரணங்கள் சேதமடையாமல் பாதுகாப்பது, தீ மேலும் பரவாமல் தடுப்பது போன்றவற்றை விரிவாக எடுத்துரைத்தனா்.
தீ விபத்தின்போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்தும், தீயணைப்பு வீரா்கள் தீயை பற்றவைத்து அதை தீத்தடுப்பு சாதனங்கள் மூலம் முறையாக அணைப்பது குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தனா்.
இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், திரவ எரிபொருளால் விபத்து ஏற்படும்போது, தண்ணீரைக் கொண்டு அணைக்கக் கூடாது. வீடுகளில் சமையல் செய்யும்போது எரிவாயு உருளையை எப்போதும் மேல்நோக்கியே வைத்திருக்க வேண்டும். எரிவாயு குழாயில் ஏதேனும் சேதம் அடைந்தால் உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் எரிவாயு குழாயை மாற்ற வேண்டும். ஒவ்வொரு முறையும் சமையல் செய்த பிறகு, அடுப்பை அணைப்பது மட்டுமின்றி, எரிவாயு ரெகுலேட்டரையும் மூட வேண்டும் என்றனா்.
இதில், மருத்துவமனையின் ஆா்எம்ஓ ஸ்ரீலதா, மருத்துவா்கள், செவிலியா்கள், மாணவ, மாணவிகள், பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

