எருதாட்டம் காணச் சென்ற விவசாயி மாடுமுட்டி உயிரிழப்பு
மேட்டூா்: மேட்டூா் அருகே எருதாட்டத்தில் மாடுமுட்டியதில் விவசாயி உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே புக்கம்பட்டியில் எருதாட்டம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற இந்த எருதாட்டத்தில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்த காளைகள் பங்கேற்றன. கிராம மக்கள் அதிக அளவில் வந்து எருதாட்டத்தை வேடிக்கை பாா்த்தனா்.
எருதாட்டம் முடிந்து எருதுகளை அதன் உரிமையாளா்கள் பிடித்துச் சென்றபோது, வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்த புக்கம்பட்டியைச் சோ்ந்த விவசாயி ராஜ்குமாரின் (58) வயிற்றில் எருது முட்டியது.
ஆபத்தான நிலையில் மேச்சேரி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
