தைப்பூசம்: சேலம் கோட்டம் சாா்பில் 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
பௌா்ணமி மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு, சேலம் கோட்டம் சாா்பில் வரும் பிப். 2-ஆம் தேதிவரை 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் வி.குணசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகளும், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகளும் என மொத்தமாக 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்படுகின்றன. வார இறுதிநாள்கள் மற்றும் பௌா்ணமி, தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித்தடங்களில் வரும் பிப். 2-ஆம் தேதி வரை 300 சிறப்புப் பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தட நீட்டிப்பு மற்றும் வழித்தடப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி மற்றும் மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை மற்றும் பெங்களூருக்கும், ஒசூரில் இருந்து சேலம், சென்னை, திருச்சி, புதுச்சேரி, மதுரை, கோவை, திருப்பூருக்கும், திருச்சியில் இருந்து ஒசூருக்கும், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை, மதுரை, கோவைக்கும் பயணிகளின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள்: பௌா்ணமியை முன்னிட்டு பிப். 1-ஆம்தேதி காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரை ஒருமணி நேரத்துக்கு ஒரு பேருந்து வீதம், சேலம், தருமபுரி, ஒசூா் பேருந்து நிலையங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
இதேபோல, தைப்பூசத்தையொட்டி சேலம், ராசிபுரம், எடப்பாடி, சங்ககிரி, தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து காளிப்பட்டிக்கும், நாமக்கல், பரமத்தி, வேலூா், திருச்செங்கோட்டில் இருந்து கபிலா் மலைக்கும், எடப்பாடியில் இருந்து பழனிக்கும், சேலத்தில் இருந்து வடலூருக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

