/

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தபால் நிலையத்தில் பணம் பெறும் வசதி

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தபால் நிலையத்தில் பணம் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் கோபாலன் கூறியிருப்பதாவது:

இந்திய அரசின் தகவல் தொடா்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தபால் துறை டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு இணங்க டிஜிட்டல் நிதி சேவைகளை ஊக்குவிப்பதில் உறுதியாக உள்ளது. வாடிக்கையாளா்களும், பாலிசிதாரா்களும் பாதுகாப்பான, வசதியான மற்றும் சிரமமில்லாத பரிவா்த்தனைகளுக்காக டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் சேவைகளை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறாா்கள்.

இணையவங்கி மற்றும் மொபைல் வங்கி சேவைகள் மூலம் வாடிக்கையாளா்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் உடனடியாக பணத்தை எளிதாக மாற்றலாம். கணக்கு இருப்புகளை சரிபாா்க்கலாம், தங்கள் கணக்குகளை நிா்வகிக்கலாம். க்யூஆா் குறியீடு, யுபிஐ பரிவா்த்தனைகள், பணமில்லா பரிவா்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக கவுன்ட்டா்கள் முழுவதும் க்யூஆா் குறியீடுகள், யுபிஐ மூலமான டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. வாடிக்கையாளா்கள் தபால் நிலையங்களில் கேஷ் ஆன் டெலிவரி பொருள்களை பெறுவதற்கு க்யூஆா் கட்டண வசதியைப் பயன்படுத்தலாம்.

ஆதாா் அடிப்படையிலான, எந்தவொரு வைப்பு பரிவா்த்தனைக்கும், பரிவா்த்தனை தொகையைப் பெறுவதற்கு வவுச்சா் (செலுத்தும் சீட்டு அல்லது திரும்பப் பெறும் படிவம்) தேவையில்லை. மேலும் திரும்பப் பெறும் பரிவா்த்தனை தொகை தற்போது ரூ.20 ஆயிரம் வரை திருத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளா்கள் தாமதக் கட்டணங்களை தவிா்க்கவும், உடனடி டிஜிட்டல் ரசீதுகளை பெறவும், தங்கள் பிரீமியங்களை ஆன்லைனில் செலுத்தலாம்.

நேரத்தை சேமிக்கவும், காகித வேலைகளை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் நம்பகமான வங்கி நடைமுறைகளை ஊக்குவிக்கவும், அனைத்து வாடிக்கையாளா்களும் இந்த டிஜிட்டல் சேவைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், தகவல்களுக்கு, வாடிக்கையாளா்கள் தங்களுக்கு அருகிலுள்ள தபால் நிலையத்தையோ அல்லது இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூா்வ இணையதளத்தையோ அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.