40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி

125 நாள் வேலைத் திட்டத்துக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.95,692 கோடியை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை விடுவித்தது.

News image
Updated On :10 ஜூன் 2026, 3:02 am IST

125 நாள் வேலைத் திட்டத்துக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.95,692 கோடியை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை விடுவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு ரூ.7,957.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு (100 நாள் வேலைத் திட்டம்) சட்டத்துக்கு மாற்றாக, விபி-ஜி ராம் ஜி (125 நாள் வேலைத் திட்டம்) மசோதா கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, அந்த மசோதா சட்டமானது.

இந்தப் புதிய சட்டத்தின்படி, 100 நாள் வேலைத் திட்டம் 125 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது; சட்டப்பேரவைகள் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டத்துக்கான நிதியில் மத்திய அரசு 60 சதவீதத்தையும், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் 40 சதவீதத்தையும் ஏற்கும்; வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இமயமலைப் பகுதியில் உள்ள உத்தரகண்ட், ஹிமாசல பிரதேச மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் இந்தத் திட்டத்துக்கான நிதியில் மத்திய அரசு 90 சதவீதத்தையும், மாநில அரசுகள் 10 சதவீதத்தையும் ஏற்கும். இந்தத் திட்டம் வரும் ஜூலை 1-இல் அமலுக்கு வருகிறது.

இந்தத் திட்டம் தொடா்பாக மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தலைமையில் செவ்வாய்க்கிழமை காணொலிக் கூட்டம் நடைபெற்றது. மாநில மற்றும் யூனியன் பிரதேச ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் பேசியதாவது:

எந்தவித இடா்ப்பாடும் இல்லாமல், தொழிலாளா்களை மையமாகக் கொண்டு 125 நாள் வேலைத் திட்டம் சீராக அமல்படுத்தப்பட வேண்டும்.

ஏற்கெனவே 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ், ரூ.30,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதனுடன், 125 நாள் வேலைத் திட்டத்தின் கீழ், இடைக்கால நிதி ஒதுக்கீடாக ரூ.95,692 கோடியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) விடுவித்தது. இதையும் சோ்த்து ஊரக மேம்பாட்டுக்கான மத்திய அரசின் மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.1.25 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

2.80 லட்சம் கிராம ஊராட்சிகளுக்கு...: இந்த நிதி நாடு முழுவதும் உள்ள சுமாா் 2.80 லட்சம் கிராம ஊராட்சிகளை சென்றடையும். அதன்மூலம், ஒவ்வொரு ஊராட்சியும் லட்சக்கணக்கில் நிதி பெறுவது உறுதி செய்யப்படும். 125 நாள் வேலை சட்டப் பிரிவுகளின் கீழ் அடையாளம் காணப்படும் வளா்ச்சிப் பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும். அந்தப் பணிகள் தடையின்றி நடைபெற வேண்டும். தொழிலாளா்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் அளிக்கப்பட்டு, அவா்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்தத் திட்டத்தின் கீழ், ஜூலை 1 முதலே திட்டப் பணிகளை வேகமாகத் தொடங்கி செயல்படுத்தும் வகையில், போதிய எண்ணிக்கையிலான பணிகளுக்கு மாநில அரசுகள் முன்கூட்டியே ஒப்புதல் அளிக்க வேண்டும். என்னென்ன பணிகள் நடைபெற வேண்டும் என்பது கிராம ஊராட்சிகள் மற்றும் கிராம சபைகள் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு, முறையான பரிந்துரைகளின் அடிப்படையில் இறுதி செய்யப்படும்.

புதுச்சேரிக்கு ரூ.40.56 கோடி: இந்தத் திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக உத்தர பிரதேசத்துக்கு ரூ.12,221.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மேற்கு வங்கத்துக்கு ரூ.8,508 கோடி, தமிழகத்துக்கு ரூ.7,957.57 கோடி, ஆந்திரத்துக்கு ரூ.7,701.21 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.7,581.57 கோடி, பிகாருக்கு ரூ.6,715.83 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களான புதுச்சேரிக்கு ரூ.40.56 கோடியும், ஜம்மு-காஷ்மீருக்கு ரூ.1,151.02 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறியதாக மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.