FOLLOW US

ON GOOGLE DISCOVER

/

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தது குறித்து...

News image

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் - கோப்புப் படம்

Updated On :25 ஜூலை 2026, 2:28 pm IST

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில், நாடு முழுவதும் போராட்டம் தொடர்ந்து முற்றியதால், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

மே 3 ஆம் தேதி நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் முன்னரே வினாத்தாள் கசிந்ததாக நடந்து முடிந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் ஜூன் 27 ஆம் தேதியில் நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது.

இதனிடையே, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும், அவர் பதவி விலக வேண்டும் என்றும்கூறி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தில்லியில் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்துக்கு இளைஞர்கள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனிடையே, நாடாளுமன்றம் நோக்கி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேரணி செல்ல முயன்றபோது, காவல்துறையினர் தடியடியும் நடத்தினர். மாணவர்கள் மீதான தடியடிக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து, அதற்கு எதிராகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்பதாகக் கூறி, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தார். இதற்கான கடிதத்தை பிரதமர் மோடிக்கும் அனுப்பியுள்ளார்.

கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, "40 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சீர்திருத்தத்துக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறேன். ஒரு வலுவான, அனைவருக்குமான தொலைநோக்கு பார்வைகொண்ட கல்விமுறைதான் ஒரு வலுவான தேசத்தின் அடித்தளமாக இருக்கும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். நாட்டின் இளைஞர்களின் உணர்வுகள் மற்றும் நியாயமான எதிர்பார்ப்புகளை நான் மிகவும் மதிக்கிறேன்.

தொலைநோக்கு பார்வைகொண்ட தலைமையின்கீழ், நாட்டுக்கு சேவையாற்ற எனக்கு வாய்ப்பளித்த பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மே 3-ல் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்ததை அறிந்த அரசு, இதன் மீதான விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைத்தது. மேலும், நடந்து முடிந்த தேர்வை ரத்து செய்து, புதிய தேர்வுக்கான தேதியையும் அறிவித்தது.

இந்தக் காலகட்டத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதும் தேர்வுகள் சுமூகமாக நடத்தப்படுவதை உறுதிசெய்வதே எங்கள் முதன்மையான முன்னுரிமையாக இருந்தது.

முதல் நாளிலிருந்தே இதற்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். இதிலிருந்து ஒருபோதும் நான் பின்வாங்கவில்லை. தேர்வு முறைகேடுகளால் திறமையான மாணவர்களின் எதிர்காலம் அழிக்கப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

கடந்த 10 நாள்களாக நடந்த நிகழ்வுகள், எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. ஜந்தர் மந்தர் மற்றும் நாடு முழுவதுமான இந்தச் சூழ்நிலையை தேசவிரோத சக்திகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதை அனுமதிக்கக் கூடாது.

நம் குழந்தைகள், தங்களின் நேரத்தைப் படிப்பில் செலுத்தி, அவர்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு, என்னுடைய ராஜிநாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ளேன்.

பிரதமரின் வழிகாட்டுதல், நம்பிக்கை, தொடர் ஆதரவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சரவையில் என் மதிப்புக்குரிய சக ஊழியர்கள், அமைச்சகத்தின் அதிகாரிகள் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசத்துக்கு சேவையாற்றுவதே என் வாழ்க்கையின் மிக உயர்ந்த முன்னுரிமை. அதில் என்றென்றுமே நான் அர்ப்பணிப்புடன் இருப்பேன்" என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

Summary

Union Minister Dharmendra Pradhan resigned

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.