தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படாததற்கு காரணம் என்ன? நீட் போராட்டத்தை திசை திருப்ப.. நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுமாறு கூறும் மத்திய அரசு! ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்போராட்டத்தில் பங்கேற்றால் நடவடிக்கை! மாணவர்களுக்கு ஜேஎன்யு, தில்லி பல்கலை. எச்சரிக்கை!ஜன நாயகன் படம் பார்த்தால் மூளைக்கு சுறுசுறுப்பு ஏற்படும்! ஜேசிடி பிரபாகர்ஒரு மாத தலைமறைவுக்கு பின் செந்தில் பாலாஜி நீதிமன்றம் வருகை!ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை!சோனம் சாருக்கு நன்றி! அமைதியான போராட்டம் தொடரும்! அபிஜீத் தீப்கேதங்கம், வெள்ளி விலை அதிரடியாக சரிவு! இன்றைய நிலவரம் (ஜூலை 24)
/

தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?

தர்மேந்திர பிரதான் பதவி விலக்கப்படாததற்கு பாஜகவில் வலுவான தலைவர் என்பது உள்ளிட்ட காரணங்கள்...

News image

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் - கோப்புப் படம்

Updated On :24 ஜூலை 2026, 1:48 pm IST

நீட் வினாத் தாள் கசிவால் தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்திப் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. ஆனால், அது குறித்து மத்திய அரசு இதுவரை பரிசீலிக்கக்கூட இல்லை; பரிசீலிக்கவே வாய்ப்பில்லை என்றுதான் கூறப்படுகிறது.

ஏன்? நாடே கொந்தளிக்கிறது, நீட் வினாத் தாள் கசிந்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் மரணத்துக்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பது நியாயமான கோரிக்கைதானே, அதனை மத்திய அரசு நிறைவேற்றாதா? என்று கேள்விகள் எழுகின்றன.

ஆனால், அரசியல், மத்திய அரசு என பல விவரங்களையும் தாண்டி, இதில் கண்ணுக்குப் புலப்படாத பல அரசியல் விவகாரங்கன் பின்னிப் பிணைந்துள்ளன.

ஒரு சர்ச்சைக்காக, மத்திய அமைச்சரவையிலிருந்து ஒரு அமைச்சரை வெளியேற்றுவது என்பது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வரலாற்றிலேயே இல்லாதது. இதுபோன்று, காரணம் ஒன்றல்ல, இரண்டல்ல ஏராளமானவை இருக்கின்றன.

தர்மேந்திர பிரதான் பல்வேறு துறைகளின் அமைச்சர் பதவிகளை வகித்திருக்கிறார், தற்போது கல்வித் துறை அமைச்சராக மக்களுக்கு அறியப்படுகிறார், அதுவும் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் பூதாகரமானதால்.

ஆனால், பாஜகவைப் பொருத்தவரை, தர்மேந்திர பிரதான் வெறும் மத்திய அமைச்சர் மட்டுமல்ல.

பல ஆண்டு காலமாக தர்மேந்திர பிரதான், பாஜகவின் மிகவும் நம்பிக்கைக்குரிய தேர்தல் கொள்கை வகுப்பாளர். ஹரியாணா, பிகார், ஒடிசா, உத்தரப் பிரதேசம் போன்ற முக்கிய மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற இவரது கொள்கைகள் அதிகம் உதவியதாக எப்போதும் இவருக்கு ஒரு பாராட்டுப் பத்திரம் எழுதப்படும். குறிப்பாக ஒடிசாவில் 24 ஆண்டு கால நவீன் பட்நாயக் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதில் மிக முக்கியப் பங்காற்றியவர் தர்மேந்திர பிரதான்.

அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என இருவருக்குமே மிகவும் நெருங்கியவரும் நம்பிக்கைக்கு உரியவருமாக விளங்குபவர் தர்மேந்திர பிரதான்.

கட்சிகளின் இரு தூண்களைப் போன்ற மோடிக்கும் அமித் ஷாவுக்கும் தனிப்பட்ட முறையில் நெருங்கிய வட்டாரங்கள் இருக்கும். ஆனால், இவர் இருவருக்குமே மிக நெருங்கிய நபர் என்பது மற்ற எல்லாவற்றையும்விட முக்கியத்துவம் பெறுகிறது. இது ஒரு மத்திய அமைச்சர் பதவியைவிடவும் மிக முக்கியமானதுதானே.

தர்மேந்திர பிரதானை, மத்திய அமைச்சரவையிலிருந்து விலக்குவது என்பது ஒரு சாதாரண நடவடிக்கையல்ல, நாடு முழுவதும் பல மாநிலங்களில் சில மாத இடைவெளியில் பேரவைத் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள் நடந்துகொண்டேதானிருக்கும். பிரதானை அமைச்சரவையிலிருந்து விலக்கிவிட்டு, அதற்கான விலையைக் கொடுக்க பாஜக தயாராகயில்லை.

இப்போதல்ல, தர்மேந்திர பிரதானை மத்திய அமைச்சரவையிலிருந்து விலக்குவது என்பது சாத்தியமே இல்லை என்பதை ஏற்கெனவே சில நிகழ்வுகள் மூலம் பாஜக உறுதி செய்திருக்கிறது.

2015 ஆம் ஆண்டு முறைகேடு செய்து இந்தியாவை விட்டுத் தப்பியோடிய லலித் மோடிக்கு உதவியதாக மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மீது சர்ச்சைகள் எழுந்தபோது, மத்திய அரசு ஒரு விளக்கம் கொடுத்தது. இது தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி அல்ல என்பதே அது. காரணம் தேசிய ஜனநாயகக் கூட்டணி சர்ச்சை எழுந்தால் அது பற்றி விசாரிப்போம். ஆனால், அமைச்சரை நீக்க மாட்டோம் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறது. இந்த நிலைப்பாடு இன்று வரை மாறவில்லை.

இன்னொரு காரணம், ஒரு சர்ச்சை எழுந்து, எதிர்க்கட்சியும், மக்களும் அழுத்தம் கொடுப்பதால், அமைச்சர் முக்கிய தலைவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டால், அடுத்து மற்றொரு பிரச்னை வரும்போது இதுபோன்ற மற்றொரு அழுத்தம் வரும். ஒவ்வொரு பிரச்னை வரும்போதும் அதற்காக மத்திய அமைச்சர்களை வெளியேற்ற முடியுமா?

நீட் வினாத்தாள் கசிவுக்காக மத்திய அமைச்சரை பதவியிலிருந்து நீக்குவது மத்திய அரசின் தோல்வியாக அமைந்துவிடும். காரணம், ஒரு நீட் தேர்வு என்று நேரடியாகப் பார்க்காமல், மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கை மற்றும் மத்திய அரசு உருவாக்கிய தேசிய தேர்வு முகமை. இரண்டும் நுழைவுத் தேர்வுகளை பொதுவாக்குவதற்காக உருவாக்கப்பட்டவை. அடுத்து இவ்விரண்டும் தோல்வியின் சின்னங்களாகப் பார்க்கப்படும்.

மத்திய அமைச்சரை நீக்கிவிட்டால், அது வெறும் அரசியல் நகர்வாக இருக்காது, அரசு நிர்வாகத்தின் தோல்வியாக மாறலாம். எனவேதான் நீட் வினாத்தாள் கசிவு குறித்து விசாரணை நடத்தப்படும். நடவடிக்கை எடுக்கப்படும் அடுத்த ஆண்டு கணினி முறையில் நடத்தப்படும் என வாக்குறுதி கொடுக்கும் மத்திய அரசு மத்திய அமைச்சரை இதற்குப் பொறுப்பாக்க முடியாது என்று தெளிவாகக் கூறுகிறது.

கடைசியாக இன்னொரு விஷயம், தர்மேந்திர பிரதான் பாஜக தலைவர்களில் மிக முக்கிய ஓபிசி தலைவர், அதுவும் கிழக்கு இந்திய மாநிலத்தைச் சேர்ந்தவர். பிகார், ஒடிசா மாநிலங்களில் யாதவர்கள் அல்லாத ஓபிசி பிரிவினரின் ஆதரவைப் பெற்று பாஜகவை வலுப்பெற செய்து வருபவர் தர்மேந்திர பிரதான்.

எனவே, நாட்டில் இதுவரை பாஜக கட்டியெழுப்பியிருக்கும் பல பிம்பங்களை, ஒரு அமைச்சரை மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்கித் தகர்த்துக் கொள்ள, அதுவும் சிஜேபியும் எதிர்க்கட்சிகளும் மக்களும் செய்யும் போராட்டத்துக்காகவெல்லாம் பாஜக அடிபணியாது என்பதே இதுவரை நடந்தவற்றிலிருந்து தெரிய வருவது.

தர்மேந்திர பிரதான் பதவி விலகவோ, பதவியிலிருந்து நீக்கப்படவோ வாய்ப்புகள் குறைவு. ஆனால், பிரதான் பதவி விலகாமல் போராட்டம் ஓயாது என்று கரப்பான்பூச்சி மக்கள் கட்சி திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

எனவே, அடுத்து நடக்கப்போவது என்ன? போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு எடுக்கப் போகும் ஆயுதம் எது? என்பதே அடுத்த கேள்வியாக மாறி நிற்கிறது.

Summary

Why does the Modi government refuse to remove Dharmendra Pradhan? What are the undisclosed reasons?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.