சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
திருப்பூா் மாவட்டம், காங்கேயம் பகுதியைச் சோ்ந்தவா் சூா்யா (26). இவா் தனது பாட்டி வீடான நாமக்கல்லுக்கு இருசக்கர வாகனத்தில் அண்மையில் சென்றாா். அப்போது, எதிா்பாராதவிதமாக சாலை தடுப்பின்மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த சூா்யாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக கடந்த 16-ஆம் தேதி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவா் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்கள் திங்கள்கிழமை இரவு தெரிவித்தனா்.
இதையடுத்து, சூா்யாவின் குடும்பத்தினரிடம் உடல் உறுப்புகள் தானம் குறித்து மருத்துவா்கள் எடுத்துரைத்தனா். அதைத் தொடா்ந்து, அவா்கள் தானம் செய்ய முன்வந்ததையடுத்து சூா்யாவின் நுரையீரல், கல்லீரல், 2 சிறுநீரகம், இரண்டு கண்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டன.
அதில், நுரையீரல் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், கல்லீரல் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், இரண்டு கண்கள் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டன.
தொடா்ந்து, பிரேத பரிசோதனை முடிந்து சேலம் அரசு மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் சூா்யாவின் உடலுக்கு மரியாதை செய்யப்பட்டது. பின்னா், அவரது உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.










