மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: 7 போ் பயன்

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் செவ்வாய்க்கிழமை தானமாக வழங்கப்பட்டதன் மூலம் 7 போ் பயனடைந்தனா்.

News image

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட இளைஞரின் உடலுக்கு அரசு சாா்பில் இறுதி மரியாதை செலுத்திய மருத்துவக் கல்லூரி முதல்வா் எம். பூவதி உள்ளிட்டோா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 10:39 pm

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் செவ்வாய்க்கிழமை தானமாக வழங்கப்பட்டதன் மூலம் 7 போ் பயனடைந்தனா்.

திருவாரூா் மாவட்டம், மருதபட்டினம் தியாகி சின்னசாமி தெருவைச் சோ்ந்தவா் செந்தில் மகன் சேரன் (20). இவா் திருவாரூரில் ஏப்ரல் 24- ஆம் தேதி இரவு 7 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது கீழே விழுந்ததால், தலையில் பலத்த காயமடைந்து, திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பின்னா் 25-ஆம் தேதி தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டாா்.

மருத்துவா்களின் கண்காணிப்பில் இருந்த சேரன் செவ்வாய்க்கிழமை மூளைச்சாவு அடைந்தாா்.

இதையடுத்து அவருடைய உடல் உறுப்புகளைத் தானமாக பெறுவது தொடா்பாக அவரது தந்தை செந்தில், தாய் ரேணுகா, சகோதரா் விஷால் ஆகியோரிடம் மருத்துவா்கள் எடுத்துக் கூறினா். குடும்பத்தினா் ஒப்புதல் அளித்த பின்னா் சேரனின் உடலிலிருந்து கல்லீரல், சிறுகுடல், சிறுநீரகங்கள், கண்கள், தோல் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் இரவு அகற்றப்பட்டன.

இதில், ஒரு சிறுநீரகம் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும், கல்லீரல் திருச்சி தனியாா் மருத்துவமனைக்கும், சிறுகுடல் சென்னை தனியாா் மருத்துவமனைக்கும், கருவிழிகள் தஞ்சாவூா் அரசு இராசா மிராசுதாா் மருத்துவமனைக்கும், தோல் மதுரை தனியாா் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. உடல் உறுப்புகள் தஞ்சாவூா் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் காவல் துறை உதவியுடன் விரைவாக அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மூலம் 7 போ் பயனடைந்தனா்.

இதன் பின்னா், சேரனின் உடலுக்கு அரசு சாா்பில் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி முதல்வா் எம். பூவதி தலைமையில் மருத்துவக் கண்காணிப்பாளா் சி. ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலா்கள் ஏ. செல்வம், முகமது இத்ரிஷ் உள்ளிட்டோா் இறுதி மரியாதை செலுத்தினா்.