மதுரை, ஆக. 5: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 750 கிராம் எடையுடன் பிறந்த குழந்தைக்கு லேசர் முறையில் கண் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவைச் சிகிச்சைக்கு அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்களும் உதவியுள்ளனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளது அழகாபுரி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மனைவி பழனியம்மாள் (25). இவர் பிரசவத்துக்காக கடந்த ஜூன் 16-ம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. சாதாரணமாக பிறக்கும் குழந்தைகள் இரண்டே முக்கால் முதல் மூன்றே கால் கிலோகிராம் எடையுடன் இருக்கும்.
ஆனால் பழனியம்மாளின் குழந்தை 750 கிராம் மட்டுமே இருந்தது. இதனால் சிசு நல சிகிச்சைப் பிரிவில் குழந்தை சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
குழந்தைக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் வெண்டிலேட்டர் கருவி உதவியுடன் நவீன சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.
மேலும் "சர்பெக்டண்ட்' (நன்ழ்ச்ஹஸ்ரீற்ஹய்ற்) என்ற ரூ.14,000 மதிப்புள்ள மருந்தும் ஏற்றப்பட்டது.
இந்த நிலையில் திடீரென குழந்தைக்கு கண் பார்வை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நவீன முறையில் லேசர் அறுவைச் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் உதவியுடன் குழந்தைக்கு லேசர் அறுவைச் சிகிச்சை 2 முறை இரு கண்களிலும் மேற்கொள்ளப்பட்டு பார்வை சரி செய்யப்பட்டது.
இதையடுத்து குழந்தை தற்போது 1 கிலோ 350 கிராம் எடையுடன் நலமாக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர்.
மிகவும் எடை குறைந்த குழந்தைக்கு நவீன முறையில் கண் அறுவைச் சிகிச்சை மேற்கொள்வது அரசு மருத்துவமனையில் முதன்முறை எனவும், அரிதானது எனவும் சிசு நலப் பிரிவு டாக்டர் எஸ்.சம்பத் தெரிவித்தார்.
குழந்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் சம்பத், நாகராஜன், சிவகுமார் மற்றும் செவிலியர் ராணி ஆகியோரை மருத்துவமனை டீன் (பொறுப்பு) எஸ்.எம்.சிவகுமார், சிசு நலப் பிரிவு துறைத் தலைவர் டாக்டர் அமுதா ராஜேஸ்வரி ஆகியோர் பாராட்டினர்.
இறப்பு விகிதம்: அரசு ராஜாஜி மருத்துவமனை சிசு நலப் பிரிவில் 2008 ஆம் ஆண்டில் 2196 சிசுக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதில் 300 குழந்தைகள் இறந்துள்ளன. இதில் எடை குறைவாகப் பிறந்த 120 குழந்தைகளும் அடக்கம். இதில் மூச்சுத் திணறல் பிரச்னை காரணமாக 78 குழந்தைகள் இறந்துள்ளன.
எடை குறைந்த குழந்தைகளில் 64 குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சி இல்லாததால் அவை இறக்க நேரிட்டுள்ளது எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
அரசு மருத்துவமனை சிசு நலப் பிரிவில் தற்போது 6 வெண்டிலேட்டர்கள் உள்ளன. இவை போதுமானதாக இல்லை என்பதும் டாக்டர்கள் கருத்து. எனவே கூடுதலாக 2 வெண்டிலேட்டர்கள் அமைத்தால் கூடுதலாக வரும் சிசுக்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.