மதுரை, நவ. 17: மதுரை அருகே உள்ள அருள்மிகு கள்ளழகர் கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் உரிய அனுமதி இன்றி விற்பனை செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து போலீஸôர் வழக்குப் பதிந்து 3 பேரை கைது செய்துள்ளனர். ஆனால், அந்நிலத்துக்குரிய பட்டா தங்களது பெயருக்கு உள்ளதாக அறக்கட்டளை நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 38,645 கோயில்கள் மற்றும் சமய நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் அறக்கட்டளைகளும் அடங்கும். இதில் தர்ம கட்டளை, குறிப்பிட்ட பணிக்கான கட்டளை என 2 வகைகள் உள்ளன.
தர்ம கட்டளைகள் சார்பில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் செய்துதரப்படுகின்றன. குறிப்பிட்ட கட்டளைகள் சார்பில் கோவில் பூஜை மற்றும் அன்னதானம் உள்ளிட்ட சேவைகள் நிறைவேற்றப்படும்.
இக்கட்டளைக்கு உரிய நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் அனுமதியைப் பெற்றே குத்தகைக்கு விட முடியும் அல்லது விற்க முடியும்.
மதுரை அருகே அழகர்கோவில் மலை அடிவாரத்தில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் உள்ளது. கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி உலகப்புகழ் பெற்றது.
ஆற்றில் எழுந்தருளிய அழகர் வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலுக்குச் செல்வார். அங்கிருந்து மீண்டும் மலைக்குப் புறப்படுவார். இச்சமயத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அப்பகுதியைச் சேர்ந்த நாச்சாரம்மாள் பெயரில் 1923-ல் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதை நாச்சாரம்மாள் மருமகன் (மகளின் கணவர்) உள்ளிட்ட உறவினர்கள் நடத்தி வந்துள்ளனர். அறக்கட்டளைக்கு மேலமடைப் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புடைய 12 ஏக்கர் நிலம் உள்ளது.
அறக்கட்டளையின் செயல்பாடு புகாருக்கு உள்ளானதால் கடந்த பல ஆண்டுக்கு முன் கள்ளழகர் திருக்கோயில் நிர்வாக அலுவலரே அறக்கட்டளையை நிர்வகித்து வந்துள்ளார்.
இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. ஆனந்தம்பிள்ளை என்பவர் வழக்கு தொடுத்தார். வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அவர் இறந்துவிட்டார். இந்நிலையில், அறக்கட்டளை நிலத்தை விற்கமாட்டோம் என உறுதி அளித்ததன் பேரில், அறக்கட்டளை மற்றும் நிலத்தை ஆனந்தம்பிள்ளை வாரிசுகளிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி கள்ளழகர் கோயில் நிர்வாகம், அறக்கட்டளை மற்றும் நிலத்தை வாரிசுகளிடம் ஒப்படைத்தது. கோயில் நிர்வாக அலுவலர் மேற்பார்வை செய்த காலத்தில், அறக்கட்டளைக்கு சேர்த்துவைத்த பணத்தை விதிகளை மீறி அறக்கட்டளை நிர்வாகிகள் செலவழித்து விட்டதாகப் புகார் எழுந்தது.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள அறக்கட்டளை நிலத்தை விதிகளை மீறி விற்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து மதுரை மண்டல இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அர.சுதர்சன், கருப்பாயூரணி போலீஸ் நிலையத்தில் 8 பேர் மீது புகார் அளித்துள்ளார்.
புகார் குறித்து அவரிடம் கேட்டபோது, "இந்து சமய அறக்கொடைகள் சட்டம் 1959-ன் படி, ஆணையர் அனுமதி பெறாமல் கோயில் மற்றும் அறக்கட்டளைகள், சமய நிறுவனங்களது சொத்துகளை விற்பது, அடமானம் வைப்பது உள்ளிட்ட செயல்களில் எவரும் ஈடுபடக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இப்போது நாச்சாரம்மாள் அறக்கட்டளை நிர்வாகிகள் அதை மீறிச் செயல்பட்டுள்ளனர். இதனால்தான் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின் புகார் அடிப்படையில் ஐ.பி.சி. 406, 420, 465, 468 மற்றும் 471 ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறிய கருப்பாயூரணி போலீஸôர், தட்சிணாமூர்த்தி, சந்திரன், கதிரேசன் ஆகியோரைக் கைது செய்துள்ளனர். டிரஸ்டி கருத்து:இதுகுறித்து புகாருக்கு உள்ளான நாச்சாரம்மன் டிரஸ்ட் நிர்வாகி தரப்பினரான தட்சிணாமூர்த்தியிடம் கேட்டபோது, ""குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, அறக்கட்டளை கைங்கரியம் மற்றும் ஆவணத்தில் உள்ள சொத்துகள் சம்பந்தமாக தேவஸ்தானம் உள்ளிட்டவற்றை எதிர்த்து வழக்குகளை வாரிசுதாரர்களாகிய நாங்களே நடத்திக்கொள்ளலாம் என்றும், கைங்கரியங்கள் மற்றும் சொத்துகள் விஷயத்தில் அவற்றைக் காப்பாற்றும் பொருட்டு வாரிசுதாரர்களே முடிவெடுத்துக்கொள்ளலாம் எனவும் ஆவணங்களில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது'' என்றார்.
கோயில் நில விற்பனையில் ஓய்வுபெற்ற அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் ஈடுபட்டிருப்பதாகவும், எனவே கோயில் அறக்கட்டளை நிலத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கள்ளழகர் திருக்கோயில் பக்தர்கள் கோருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.