திருவாடானை, நவ. 24: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அரசு மருத்துவமனை தாலுகா மருத்துவமனையாக இயங்கி வருகிறது. ஆனால், இம் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இங்கு நாள்தோறும் சுமார் 1,000 புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். காலை 6 மணிக்கே வரத் தொடங்கி விடுவர். ஆனால், உரிய நேரத்தில் மருத்துவர்கள் வருவதில்லை என புகார் கூறப்படுகிறது.
தற்போது தொண்டிப் பகுதியில் கிழக்கு கடற்கரைச் சாலையில் அதிக அளவில் விபத்துகள் நடைபெறுகின்றன. அவர்கள் அவசர சிகிச்சை பெற வேண்டுமானால் இம் மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்துகள் இல்லை. இதனால் ராமநாதபுரம் அல்லது மதுரை செல்ல வேண்டியுள்ளது.
இந்த மருத்துவமனையில் 6 மருத்துவர்கள் பணிபுரிய வேண்டிய நிலையில், 4 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இருப்பினும், பெண் மருத்துவர்கள் இல்லை. தாலுகா மருத்துவமனையாக இருந்துவரும் நிலையில், எக்ஸ்ரே, ஸ்கேன் உண்டு. ஆனால், உரிய மருத்துவர்கள் இல்லை. லேப் டெக்னீசியன், எழுத்தர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை.
ஊழியர்கள் தங்குவதற்கு போதிய குடியிருப்பு வசதி இல்லை.
இதுதொடர்பாக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நாகநாதன் கூறுகையில், நாங்கள் பல ஆண்டுகளாக பல போராட்டங்களை நடத்தியும் எந்த பயனும் இல்லை. குறைந்தபட்சம் தண்ணீர் பிரச்னை முடிவுக்கு வந்தால், பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
சினேகவள்ளிபுரம் சொர்ணவள்ளி கூறுகையில், கழிப்பறை வசதி இல்லாததால், சுற்றுப்புறத்தை அசிங்கப்படுத்துகின்றனர். சுற்றுப்புறச் சுகாதர வசதி போதுமானதாக இல்லை என்றார்.
இதுதொடர்பாக மருத்துவர் கூறுகையில், இங்கு போதுமான உயிர் காக்கும் மருந்துகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், மருத்துவமனையில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன.
மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்து, மாவட்ட நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியுள்ளோம்.
கூடிய விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.