வருவாய்த் துறையில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படுமா?

தேனி, ஜூன் 13: தேனி மாவட்டத்தில் வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில், பல்வேறு நிலைகளில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், பணிகள் தேக்கமடைந்து, பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாகப் புகார்கள்
Updated on
1 min read

தேனி, ஜூன் 13: தேனி மாவட்டத்தில் வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில், பல்வேறு நிலைகளில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், பணிகள் தேக்கமடைந்து, பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

மாவட்டத்தில் தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, உத்தமபாளையம் ஆகிய வட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன.

இவற்றை நிர்வகித்துவரும், வருவாய்த் துறையில் பெரும்பாலான பணியிடங்கள்  நிரப்பப்படாமல் உள்ளன. இத்துறையில் பணியாற்றும் உதவியாளர்கள் பெரும்பாலானோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மொத்தமுள்ள 110 உதவியாளர் பணியிடங்களில், 70 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இளநிலை உதவியாளர் காலிப் பணியிடங்களில், தாற்காலிகப் பணியாளர்கள் பணி நிரவல் செய்யப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான அலுவலகங்களில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள், பல ஆண்டுகளாகக் காலியாக உள்ளன. 80-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதேபோல, ஊரக வளர்ச்சித் துறையில் 22 தட்டச்சுப் பணியாளர், 65 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்நிலையில், அரசு நலத்திட்ட உதவிகளை கிராம மக்களுக்கு வீடு தேடிச் சென்று வழங்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது.

இதுதவிர, மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் கோரி, பொதுமக்கள் மனு அளிக்கின்றனர். வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் போதிய பணியாளர்கள் இல்லாததால், பொதுமக்களின் மனுக்கள் மீது, உடனுக்குடன்  நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. இதனால் உதவிகோரும் பொதுமக்கள்  அலைக்கழிக்கப்படுகின்றனர்.

விவசாயத் துறை மூலம் மானிய உதவிகளைப் பெற வருவாய்த் துறையினரிடம் சான்றிதழ் பெற வேண்டியுள்ளதால், பணியாளர் பற்றாக்குறையால் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

பள்ளி, கல்லூரி மற்றும் விடுதியில் சேர்வதற்கும், கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் சான்றிதழ் பெற கிராம நிர்வாக அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மாணவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் போதிய உதவியாளர்கள் இல்லாததால் பணிகள் தாமதமாகின்றன.

அதிகாரபூர்வமற்ற பணியாளர்கள்: நிர்வாகப் பணிகளுடன் அரசுத்  திட்டங்களை செயல்படுத்தும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், அதிக பணிச்சுமை ஏற்படுவதாக பணியாளர்கள் கூறுகின்றனர். இதனால், பணியாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் தினக்கூலி அடிப்படையில் அதிகாரப்பூர்வமற்ற பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். குறைந்த சம்பளத்தில் நியமிக்கப்படும் பணியாளர்களால், பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதாகவும், முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆகவே வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com