தேனி, அக். 24: தேனி மாவட்டத்தில் செங்கல் உற்பத்தி குறைந்துள்ளதால், அதன் விலை உயர்ந்துள்ளது. இதனால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தேனி மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட செங்கல் காளவாசல்கள், 20-க்கும் மேற்பட்ட செங்கல் சேம்பர்கள் உள்ளன. மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் செங்கல்கள் உள்ளூர், வெளி மாவட்டங்கள் மட்டுமில்லாமல் கேரளத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தேவை அதிகரிப்பு: கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் செங்கல் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கலைஞர் வீடு வழங்கும் திட்டப் பணிகளை 2011, ஜனவரி மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்றும், இந்திரா நினைவு குடியிருப்பு திட்ட வீடுகள், புதிய சமத்துவபுரம் கட்டுமானப் பணிகள் ஆகியவற்றையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
தேவை அதிகரித்துள்ளதால் செங்கல், சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரூ.3.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த செங்கல், தற்போது ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் கட்டுமானப் பணிகளுக்காக செங்கல் கொள்முதல் செய்வதற்குக் கல் ஒன்றுக்கு அரசு ரூ.3 விலை நிர்ணயம் செய்துள்ள நிலையில், தற்போது செங்கல் ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுவதால் பயனாளிகள் மற்றும் அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். இதனால் குறைந்த விலையில் கிடைக்கும் புகையடிக் கற்கள் மற்றும் உடைக் கற்களை வாங்கிப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
தட்டுப்பாடு:காளவாசல்களில் உற்பத்தியாகும் செங்கல்களை வெளிமாவட்ட வியாபாரிகள் மொத்தமாக விலைபேசி, முன் பணம் கொடுத்துக் கொள்முதல் செய்கின்றனர். இதனால் உள்ளூர் கட்டுமானப் பணிகளுக்குச் செங்கல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தேனி செங்கல் காளவாசல் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:கடந்த 2 மாதங்களாக மழையால் பாதிக்கப்படிருந்த செங்கல் உற்பத்தி, தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. விறகு ஒரு டன் ரூ.4 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதனால் செங்கல் விலையும் உயர்ந்துள்ளது.
தற்போது அரசு திட்டங்களுக்காக செங்கல் தேவை அதிகரித்துள்ளதால், அதன் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப விலை கிடைத்து வருகிறது. மதுரை, கோவை, திருச்சி, விழுப்புரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள், இங்கு அதிகளவில் செங்கல் கொள்முதல் செய்கின்றனர் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.