மாதாந்திர தொடர் வைப்புத் திட்டத்தில் சேமித்த பணம் கிடைக்குமா?: பொதுமக்கள் அச்சம்
போடி, ஆக. 31: போடி தலைமை அஞ்சலகத்தில் மாதாந்திர தொடர் வைப்புத் திட்டத்தில் சேமித்த பணம் திரும்ப கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அஞ்சலகங்களில் சேமிப்பு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சேமிப்பு கணக்கு, மாதாந்திர தொடர் வைப்பு திட்டம் (த.ஈ), மாதாந்திர வட்டி பெறும் திட்டம் (ஙஐந), குறித்த காலங்களில் முதலீடு செய்யும் திட்டம் (பண்ம்ங் ஈங்ல்ர்ள்ண்ற்) மற்றும் சேமிப்பு பத்திரங்கள் வழங்குதல் போன்ற திட்டங்களில் பொதுமக்கள் சேமித்து பயனடைந்து வருகின்றனர். வங்கிகளில் ரிசர்வ் வங்கி குறிப்பிடும் நேரங்களில் வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படுகிறது. ஆனால் அஞ்சலகங்களில் பணத்தை வைப்பீடு செய்யும்போது குறிப்பிடப்படும் வட்டு முதிர்வடையும் காலம் வரை மாற்றம் செய்யப்படுவதில்லை. இதனால் அஞ்சலகங்களில் முதலீடு செய்வதையும், சேமிப்பதையும் பொதுமக்கள் அதிகம் விரும்புகின்றனர்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அஞ்சலகங்கள் உள்ளதால் பாதுகாப்பானதாக நினைத்து மக்கள் சேமித்து வருகின்றனர். மேலும் நடுத்தர மற்றும் ஏழை மக்களும் பயன்பெறும் வகையில் குறைந்த பணத்தையும் சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யும் வசதி உள்ளது. சாதாரணமாக சேமிப்பு கணக்கு தொடங்க ரூ.50 இருந்தாலே போதுமானது. இதேபோல் ஆர்.டி. எனப்படும் மாதாந்திர தொடர் வைப்பு திட்டத்தில் மாதம் ரூ.10 முதல் சேமிக்கலாம். இத்திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு செலுத்தப்படும் தொகை வட்டியுடன் பெறலாம்.
போடி தலைமை அஞ்சலகத்தில் ஆயிரக்கணக்கானோர் மாதாந்திர தொடர் வைப்புத் திட்டத்தில் சேமித்து வருகின்றனர்.
போடி தலைமை அஞ்சலகத்தில் 30-க்கும் மேற்பட்ட சிறுசேமிப்பு முகவர்கள் உள்ளனர். மாதாந்திர தொடர் வைப்பு திட்டத்தில் தினமும் சராசரியாக 10 முகவர்கள் 300 பேருக்கு பணம் செலுத்துவர். ஆரம்பத்தில் போடி தலைமை அஞ்சலகத்தில் பதிவேடு முறை இருந்தது. தற்போது கணினி முறையில் வரவு செலவு செய்யப்பட்டு வருகிறது.
இதில் மாதாந்திர தொடர் வைப்பு திட்டம் முதிர்வடையும் நேரத்தில் கணினியில் பார்க்கும்போது அந்த கணக்குகளின் விவரம் குறித்து தகவல் கிடைப்பதில்லை. இதனை தலைமை அஞ்சல் அலுவலரே சரிசெய்து கணக்கு முதிர்வுத் தொகை வழங்கப்பட்டு வந்தது. அதற்குத் தடை விதித்து மதுரை மண்டல அலுவலகத்திலிருந்து வந்துதான் சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாதாந்திர தொடர் வைப்பு கணக்கில் முதிர்வடைந்தவர்களுக்கு பணம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவசரத் தேவைகளுக்கு இந்த பணம் கிடைக்காமல் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் கணினி குளறுபடியால் பணம் கிடைக்காமல் போகுமோ என்ற அச்சமும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையில் போடி தலைமை அஞ்சலகத்தில் அலுவலர்களுடன் தினமும் வாக்குவாதத்தில் பொதுமக்கள் ஈடுபடும் நிலை உள்ளது. மேலும் தேனியில் செயல்பட்டு வரும் கோட்ட தபால் கண்காணிப்பாளர் அலுவலகம் பொதுமக்கள் பிரச்னைகளில் அக்கறை செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்களிடையே இருந்து வருகிறது.
இதுகுறித்து போடி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் கேட்டபோது கூறியது:
போடி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் கணினிமயமாக்கியபோது, பழைய பதிவேடுகளில் இருந்த கணக்குகளை கணினியில் டேட்டா என்ட்ரி முறையில் பதிவதற்கு ஒப்பந்த பணியாளர்கள் பயன்படுத்தி அவசரகதியில் பதிவு செய்யப்பட்டது. அதில் சில பதிவுகளில் தவறு ஏற்பட்டிருந்தால் இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டுவரும். இவற்றை தலைமை அஞ்சல் அலுவலரே சரி செய்து வந்தார். தற்போது அதற்கு மதுரை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் தடை விதித்துவிட்டார். இதனால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம். விரைவில் சரியாகிவிடும். மற்றபடி பொதுமக்கள் செலுத்திய பணம் கட்டாயம் வழங்கப்படும். அவர்கள் அச்சப்படத் தேவையில்லை
என்றனர்.