திருவாடானை, செப். 27: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் | 1.40 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அரசு பொது மருத்துவமனை புதிய கட்டடம், திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது.
திருவாடானையில் 24 படுக்கை வசதி கொண்ட தாலுகா அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு இப்பகுதியைச் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். 6 மருத்துவர்கள் பணி புரிய வேண்டிய இடத்தில், இரண்டு மருத்துவர்கள் மட்டுமே பணி புரிந்து வருகின்றனர். பெண் மருத்துவர் பணியிடம் பல ஆண்டுகளாக காலியாக உள்ளது.
இந்த மருத்துவமனையில் நீண்ட காலமாக சிறப்பாக செயல்பட்டு வந்த குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் தியேட்டர், தற்போது போதிய மருத்துவர்கள் இல்லாததால் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் புதிய கட்டடப் பணி ஆரம்பிக்கப்பட்டது. கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதில் 38 படுக்கை வசதி உள்ளது. ஸ்கேன் அறை, ஆபேரஷன் தியேட்டர், ரத்த சேமிப்பு நிலையம் என்று தனித்தனியாக அறைகள் கட்டப்பட்டுள்ளன.
எனவே, கூடுதல் மருத்துவர்கள் பணி நியமனத்துடன் புதிய மருத்துவமனை கட்டடத்தை விரைந்து திறக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது சம்பந்தமாக முன்னாள் கவுன்சிலர் நாகநாதன் கூறியது:
ஏற்கெனவே உள்ள மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், வசதிகள் இல்லை. மருத்துவமனையை சுத்தம் செய்ய பணியாளர் இல்லை. இதனால் சுகாதாரக் கேடு அபாயம் உள்ளது. பொதுப்பணித் துறையினரிடம் பல முறை புகார் தெரிவித்தும் பலன் இல்லை.
வெளியில் இருந்து வரும் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு இங்கு போதுமான தங்கும் வசதி இல்லை. இதனால் இங்கு யாரும் தங்குவதில்லை.
தற்போது | 1.40 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. போதுமான மருத்துவர்களை நியமித்து, புதிய கட்டடத்தைத் திறக்க வேண்டும். இது குறித்து தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடமும், திருவாடானை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.
இது சம்பந்தமாக திருவாடானை தலைமை மருத்துவர் இளங்கோ மகேஸ்வரன் தெரிவித்தது:
மருத்துவமனை புதிய கட்டடத் திறப்பு விழா குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
தண்ணீர் வசதிக்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடமும், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டப் பொறியாளரிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம்.
தாலுகா மருத்துவமனை என்பதால் அதிகமான புறநோயாளிகள் வருகிறார்கள். ஆனால் போதுமான மருத்துவர்கள் இல்லை. 34 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடத்தைத் திறந்தால் கூடுதலாக 9 மருத்துவர்கள், குறிப்பாக பெண் மருத்துவரை நியமனம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யும் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.