மதுரை, மே 18: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எட்டு வயதுச் சிறுமிக்கு அறுவைச் சிகிச்சை இன்றி இதய ரத்தக் குழாயை அடைத்து நவீன சிகிச்சை புதன்கிழமை அளிக்கப்பட்டது. இது மாநிலத்திலேயே முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்தவர் எபனேசர். இவரது எட்டு வயது மகளுக்கு அடிக்கடி காய்ச்சல், தலைவலி, மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பல மருத்துவமனைகளில் சிறுமியைச் சோதித்து உள்ளனர். அப்போது சிறுமிக்கு இதய பாதிப்பு இருப்பதால் அறுவைச் சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. இச்சிகிச்சைக்கு பல லட்சம் ரூபாய் செலவிட தன்னால் இயலாது என்பதால், மதுரை அரசு மருத்துவமனை இதய சிகிச்சைப் பிரிவில் மகளைச் சேர்த்தார் எபனேசர்.
சிறுமியை மருத்துவர்கள் சோதனையிட்டபோது, இதயத் தமனியிலிருந்து இடது கீழறைக்கு (வென்ட்ரிகிள்) செல்லவேண்டிய ரத்தக் குழாய்க்கு பதிலாக வலது மேலறைக்குச் (ரைட் ஆரிக்கிள்) செல்லும் வகையில் கரோனரி ஏ.வி.பிஸ்டுலா ரத்தக் குழாய் அமைந்திருந்தது தெரியவந்தது.
இவ்வாறு வழக்கத்துக்கு மாறாக ரத்தம் செல்வதால் சிறுமிக்கு காய்ச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து சிறுமிக்கு அறுவைச் சிகிச்சை 4 மணி நேரம் மேற்கொண்டு, தேவையற்ற ரத்தக் குழாயை அடைக்க முடிவுசெய்தனர்.
ஆனால், சிறுமியின் உடல் நலம், அவளுக்குத் தேவைப்படும் 8 பாட்டில் ரத்தம் ஆகியவற்றின் காரணமாக அறுவைச் சிகிச்சை (பைபாஸ் சர்ஜரி) செய்ய இயலாத நிலையும் இருந்தது.
இதையடுத்து இதய சிகிச்சைப் பிரிவு தலைவர் டாக்டர் வி.அமுதன் தலைமையிலான டாக்டர்கள் குழு ஆஞ்சியோ மூலம் சிறுமியின் இதயத்தில் உள்ள தேவையற்ற ரத்தக் குழாயை அடைக்க முடிவு செய்தது.
இதற்கான சிகிச்சை, புதன்கிழமை காலையில் சிறுமிக்கு அளிக்கப்பட்டது. அதன்படி சிறுமியின் வலது தொடையிலிருந்து ரத்த தமனி மூலம் சிறு வயர் செலுத்தப்பட்டது. வயரின் முனையில் சுருக்கு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, தேவையற்ற ரத்தக் குழாயை இழுத்து பின்னர் சிறு காயில்கள் மூலம் ரத்தக் குழாயை அடைத்தனர்.
சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இச்சிகிச்சை மூலம் தேவையற்ற ரத்தக் குழாய் அடைக்கப்பட்டது. இதனால் வழக்கம்போல ரத்தம் இதயத்தின் இடது தமனியிலிருந்து இடது வென்ட்ரிகிளுக்குச் சென்றது.
இந்தச் சிகிச்சையை துணிச்சலுடன் மேற்கொண்ட டாக்டர்கள் வி.அமுதன், கண்ணன், ஜனார்த்தனன், நயினார் முகமது, பாலசுப்பிரமணியன், சிவகுமார் ஆகியோரை மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளர் டாக்டர் ராமானுஜம் பாராட்டினார்.
அறுவைச் சிகிச்சை இன்றி ஆஞ்சியோ மூலம் ரத்தக் குழாய் அடைப்பு சிகிச்சை பெற்ற சிறுமி இப்போது நலமுடன் உள்ளார்.
இதுகுறித்து டாக்டர் அமுதன் கூறுகையில், இதுபோன்ற பாதிப்பு லட்சத்தில் ஒருவருக்கே ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் அறுவைச் சிகிச்சை மூலமே சரிசெய்ய முடிந்துள்ளது. ஆனால் இப்போது முதன்முறையாக அரசு மருத்துவமனையில் இதுபோன்ற ஆஞ்சியோ மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.