திருப்பரங்குன்றம், மே 8: திருப்பரங்குன்றம் திருக்கோயிலில் அமைந்துள்ள சனீஸ்வர பகவான்
சன்னதியை வேறு இடத்தில் மாற்றி அமைக்க கோயில் நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள மூலஸ்தானத்தில் முருகப் பெருமானைத் தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் சண்முகர் சன்னதி வழியாக வருகின்றனர்.
வரும் பாதை பகுதியில் சிவன், அம்மன், செந்தில் ஆண்டவர், ராகு, கேது உள்ளிட்ட விக்ரகங்கள் அமைந்துள்ளன. இதே மண்டபத்தில் சனீஸ்வர பகவானுக்கு என்று தனி சன்னதி அமைந்துள்ளது.
மற்ற கோயில்களில் நவக்கிரகங்களுடன் சனீஸ்வர பகவான் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆனால் இந்தக் கோயிலை பொறுத்தவரை சனீஸ்வர பகவான் தனியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதுவே இந்தக் கோயிலின் தனிச் சிறப்பாகும்.
சண்முகர் சன்னதி வழியாக பக்தர்கள் செல்வதாலும்,பல விக்ரகங்கள் வழியில் இருப்பதாலும் விழாக் காலங்களில் நெரிசல் ஏற்படுகிறது.
இதனையடுத்து தற்போது நடைபெற்று வரும் திருப்பணிகளுடன் சனீஸ்வர பகவான் சன்னதியை மட்டும் மாற்றி பக்தர்களின் தரிசனத்துக்கு வசதியாக கம்பத்தடி மண்டபத்தில் சஷ்டி காப்பு கட்டும் இடத்தில் வைக்கலாமா என கோயில் நிர்வாகத்தினர் ஆலோசனைகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக ஸ்தபதிகளிடமும் கருத்து கேட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.