ஆற்றைக் கடந்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்: ஆபத்தைத் தடுக்க அரசு முன்வருமா?

தேனி,பிப்.12:  தேனி மாவட்டம் அய்யனார்புரம் கிராமத்துக்கு பஸ் வசதியில்லாததால், பள்ளி, கல்லூரிக்கு மாணவர்கள் ஆபத்தான நிலையில் ஆற்றைக் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.    அரண்மனைப் புதூர் ஊராட்சிக்கு
Updated on
1 min read

தேனி,பிப்.12:  தேனி மாவட்டம் அய்யனார்புரம் கிராமத்துக்கு பஸ் வசதியில்லாததால், பள்ளி, கல்லூரிக்கு மாணவர்கள் ஆபத்தான நிலையில் ஆற்றைக் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

   அரண்மனைப் புதூர் ஊராட்சிக்கு உள்பட்ட அய்யனார்புரம் கிராமத்தில் தொடக்கப்பள்ளி மட்டும் உள்ளது.

      5-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்கள் 3 கி.மீ., தூரம் உள்ள கொடுவிலார்பட்டியிலும், 5 கி.மீ., தூரம் உள்ள தேனியிலும் உள்ள பள்ளிகளுக்குச் சென்று படிக்க வேண்டும். அய்யனார்புரத்தில் இருந்து இந்த ஊர்களுக்கு சென்று வருவதற்கு சாலை வசதி இருந்தும் பஸ் வசதி இல்லை.

  அய்யனார்புரத்தில் உள்ள வைகை ஆற்றின் மறு கரையில், அமச்சியாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் அய்யனார்புரத்தைச் சேர்ந்த மாணவர்கள் தினமும் ஆபத்தை எதிர்கொண்டு ஆற்றைக் கடந்து அமச்சியாபுரத்தில் உள்ள பள்ளியிலும், அமச்சியாபுரத்தில் இருந்து குன்னூர் வழியாக 8 கி.மீ., தூரம் பஸ்சில் சென்று தேனியில் உள்ள பள்ளிகளிலும் படித்து வருகின்றனர்.

    பள்ளிப் படிப்புக்காக ஆற்றை கடந்து செல்லும்போது தண்ணீரிலும், பாறையிலும் வழுக்கி விழுந்து காயமடைவதாகவும், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில், அய்யனார்புரத்தில் இருந்து 3 கி.மீ. தூரம் அரண்மணைப்புதூருக்கு நடந்து சென்று, அங்கிருந்து தேனி மற்றும் அமச்சியாபுரத்துக்கு பஸ்சில் சென்று படித்து வருவதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர்.

   இந்த சிரமங்களை கருதி, குழந்தைகளின் படிப்பை பாதியில் நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் சிலர் கூறுகின்றனர்.

    இதுகுறித்து அரண்மனைப்புதூர் ஊராட்சித் தலைவர் பிச்சை கூறியது: அய்யனார்புரம், கோட்டைபட்டி, வீருசின்னம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி படிப்புக்கு மட்டுமின்றி, க.விலக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்வதற்கும் பொதுமக்கள் வைகை ஆற்றை கடந்து சென்று வருகின்றனர்.

    அய்யனார்புரம்-அமச்சியாபுரம் வைகை ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து போக்குவரத்து வசதி ஏற்படுத்தினால், தேனியில் இருந்து சுப்புலாபுரம், கண்டமனூர், கடமலைக்குண்டு, வருஷநாடு ஆகிய பகுதிகளுக்கும் தற்போது உள்ள வழித்தடத்தை விட குறைந்த தூரத்தில் சென்று வரலாம்.

   அய்யனார்புரத்துக்கு போதிய பஸ் வசதி ஏற்படுத்தி தரவும், அரண்மனைப்புதூரில் உள்ள நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்தவும் திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் மாவட்ட கல்வித் துறைக்கு மனு அளித்துள்ளோம்.

     இந்த கோரிக்கை குறித்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்த உள்ளோம் என்றார்.

    கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் பஸ் வசதியின்றி தவித்து வரும் கிராம மக்கள்,  போடி சட்டப்பேரவை தொகுதிக்கு தற்போது அமைச்சர் தொகுதி அந்தஸ்து கிடைத்துள்ளதால் தங்களது கோரிக்கை நிறைவேறும் என்ற எதிர்பார்த்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com