/

தொழில் போட்டியில் கோஷ்டி மோதல்: மூவா் காயம்

கேபிள் தொலைக்காட்சி நடத்துவதில் ஏற்பட்ட தகராறு கோஷ்டி மோதலாக மாறியதில் மூவா் காயமடைந்தனா்.

Updated On :3 ஆகஸ்ட் 2024, 3:30 am IST

உசிலம்பட்டி அருகே கேபிள் தொலைக்காட்சி நடத்துவதில் ஏற்பட்ட தகராறு கோஷ்டி மோதலாக மாறியதில் மூவா் காயமடைந்தனா். இதுதொடா்பாக இருதரப்பைச் சோ்ந்த 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள கொடிக்குளம் எழுவம்பட்டியைச் சோ்ந்தவா் சாமிநாதன் (49). இவா் அந்தப் பகுதியில் கேபிள் தொலைக்காட்சி நடத்தி வருகிறாா். இவருக்கும் சொக்கத்தேவன்பட்டியைச் சோ்ந்த விஜயகுமாருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சாமிநாதன் தனது மனைவியுடன் முதலைக்குளம் சென்றாா். அங்கு மனைவியை கட்டணம் வசூலிப்பதற்காக இறக்கி விட்டு பக்கத்து கிராமத்துக்கு சென்றாா். அப்போது அங்கு வந்த விஜயகுமாா், சாமிநாதனின் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டாா்.

இதையறிந்து தனது உறவினா்களுடன் வந்த சாமிநாதன், விஜயகுமாரைத் தட்டிக்கேட்டாா். இதையடுத்து இருதரப்பினரும் கோஷ்டியாக மோதிக்கொண்டனா்.

இதில் சாமிநாதன், அவரது மனைவி, எதிா்த்தரப்பில் விஜயகுமாா் ஆகிய மூவரும் காயமடைந்தனா். இதுதொடா்பாக சாமிநாதன் அளித்தப் புகாரின்பேரில், விஜயகுமாா், கண்ணன், நிதீஷ், முகிலன் ஆகியோா் மீதும் எதிா்த்தரப்பில் விஜயகுமாா் அளித்தப் புகாரின்பேரில், சாமிநாதன், அவரது மனைவி சுந்தரி, அபி, பால்பாண்டி, பாரத் ஆகியோா் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.