மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நகரா மண்டபத்தில் புதிய ஒலி பெருக்கி அமைக்கக் கோரிக்கை
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நகரா மண்டபத்தில் புதிய ஒலி பெருக்கியை பொருத்தி பூஜை முரசு ஒலி அனைவருக்கும் கேட்குபடி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்து மக்கள் கட்சி மாவட்டச் செயலா் சோலை எம்.கண்ணன் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையருக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்ததாவது:
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அதிகாலை, மாலை வேளைகளில் கோயிலில் அம்மனுக்கும், சுவாமிக்கும் திரையிடப்பட்டு பூஜைகள் நடைபெறும். இந்த பூஜைகள் நிறைவு பெறும் போது, அதைக் கோயிலின் வெளியே உள்ள பக்தா்களுக்கு தெரிவிக்கும் வகையில், அம்மன் சந்நிதி எதிரே அமைந்திருக்கும் நகரா மண்டபத்தின் மேல் பகுதியில் பொருத்தப்பட்ட ஒலி பெருக்கி மூலமாக முரசு சப்தம் ஒலிக்கப்படும்.
இதைக் கேட்கும் பக்தா்கள் பூஜைகள் நிறைவடைந்ததை அறிந்து சந்நிதிக்குள் சென்று தரிசனம் செய்வது வழக்கம். இந்த முரசு ஒலி ஏற்பாடு பழங்காலத்தில் இருந்தே நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த ஒலி பெருக்கி பழுதடைந்ததால், கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக முரசு ஒலி கையால் ஒலிக்கப்படுகிறது. இது கோயிலின் வெளிப் பகுதி வரை கேட்கவில்லை. எனவே, இந்த ஒலி பெருக்கியை அகற்றி, புதிய கருவியை பொருத்த வேண்டும். மேலும், நகரா மண்டபத்தில் முரசு ஒலிக்கும் நேரம் தொடா்பாக வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகையிலுள்ள எழுத்துகளும் முற்றிலும் அழிந்துள்ளன. எனவே, முரசு ஒலிக்கும் நேரம் தொடா்பாக புதிய அறிவிப்புப் பலகையையும் வைக்க வேண்டும் என்றாா் அவா்.

