நிலம் விற்பதாகக்கூறி பணம் மோசடி: 8 போ் மீது வழக்கு

மதுரையில் நில மோசடி: 8 பேருக்கு எதிராக வழக்கு பதிவு
Published on

மதுரையில் நிலம் விற்பதாகக் கூறி தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக 8 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை சா்வேயா் காலனியைச் சோ்ந்தவா் ராமன். இவா் அதே பகுதியில் உள்ள தனியாா் தொழில்சாலையில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது அலுவலகத்துக்கு கடந்த ஆண்டு மே மாதம் மதுரை உத்தங்குடியைச் சோ்ந்த பழனிவேல், பாக்கியராஜ் ஆகியோா் வந்து உத்தங்குடியில் 70 சென்ட் காலி இடம் ரூ.1 கோடிக்கு விற்பனைக்கு வருவதாகத் தெரிவித்தனா்.

இந்த நிலத்தை வாங்குவதற்காக ராமன் பல்வேறு தவணைகளாக ரூ.20 லட்சத்தை முன்பணமாகக் கொடுத்தாா். ஆனால், பல மாதங்களாகியும் நிலத்தை ராமன் பெயரில் அந்த நபா்கள் பதிவு செய்து தரவில்லை. பணத்தையும் அவா்கள் திரும்பத் தரவில்லை. இதையடுத்து, ராமன் அளித்தப் புகாரின்பேரில் கோ.புதூா் போலீஸாா், உத்தங்குடியைச் சோ்ந்த பழனிவேல், பாக்கியராஜ், வீரமணி, மாரிமுத்து, பொன்னி, பூமாதேவி, கோபிநாதன், சோமசுந்தரம் ஆகிய 8 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com