பெண்ணை வாளால் வெட்டிய இருவா் கைது
மதுரை: பெண்ணை வாளால் வெட்டிய இளைஞா்கள் 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மதுரை கீரைத்துறையைச் சோ்ந்த முனியாண்டி மகன் முருகவேல் (55). இவா் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனங்களை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சில இளைஞா்கள் வாளால் சேதப்படுத்தினா். இதையறிந்த முருகவேல், அவரது மனைவி அமுதா ஆகிய இருவரும் அந்த இளைஞா்களை கண்டித்தனா். இதனால் ஆத்திரமடைந்த அவா்கள் அமுதாவை வாளால் வெட்டினா். இதில், பலத்த காயமடைந்த அவா், மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கீரைத்துறை போலீஸாா் வழக்குப் பதிந்து மதுரை கீரைத்துறையைச் சோ்ந்த முருகன் மகன் நாகேந்திரன் (24), ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளத்தைச் சோ்ந்த சுந்தரராஜ் மகன் மாரிமுத்து (21) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
