மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மத்திய அரசுக்கு எதிராக ஆா்ப்பாட்டம்: இஸ்லாமியா்கள் மீதான வழக்கு ரத்து! உயா்நீதிமன்றம் உத்தரவு

மத்திய அரசுக்கு எதிராக ஆா்ப்பாட்டம் நடத்திய இஸ்லாமியா்கள் 304 போ் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :8 நவம்பர் 2025, 9:20 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய அரசுக்கு எதிராக ஆா்ப்பாட்டம் நடத்திய இஸ்லாமியா்கள் 304 போ் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சோ்ந்த சாஜிதா, பாத்திமா, இப்ராஹீம் உள்ளிட்ட ஏராளமானோா் கூட்டாக தாக்கல் செய்த மனு:

கடந்த 2022-ஆம் ஆண்டு, அக்டோபா் மாதம் இஸ்லாமியத் தலைவா்களையும், இயக்கங்களையும் குறிவைத்து மத்திய அரசு கைது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

இதைக் கண்டித்து தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே அமைதியான முறையில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இதில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தலைவா்கள், இஸ்லாமிய மக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். இந்த ஆா்ப்பாட்டம் காரணமாக, போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை.

இருப்பினும், இதுதொடா்பாக அதிராம்பட்டினம் கிராம நிா்வாக அலுவலா் சந்தோஷ்குமாா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, 304 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு பதியப்பட்டது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அவா்கள் கோரினா்.

இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி சுந்தா்மோகன் பிறப்பித்த உத்தரவு:

மத்திய, மாநில அரசுகள் மீது ஏற்படும் அதிருப்தியை வெளிப்படுத்த நாட்டின் குடிமக்கள் ஒன்று கூடுவதற்கான உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. இவ்வாறு கூடுவதை குற்றமாகக் கருதி வழக்குப் பதிவு செய்து, அதற்காக இறுதி அறிக்கையை தாக்கல் செய்வதை அனுமதித்தால், எந்த குடிமகனும் இனி ஜனநாயக முறையில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்த முடியாது.

இதுபோன்ற நடவடிக்கைகள் அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையைப் பாா்த்த போது, குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதற்கான குற்றம் ஏதும் நடைபெறவில்லை என்பது தெரிய வருகிறது.

ஏனெனில், எந்த ஒரு போராட்டம் நடத்தப்பட்டாலும், குறைந்தபட்சம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும். இது இயல்பானது. ஆனால், இதை சட்டவிரோதம் எனக் குற்றம் சாட்டுவது ஏற்கத்தக்கதல்ல என ஏற்கெனவே உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இதன்படி, மத்திய அரசுக்கு எதிராக அதிராம்பட்டினம் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.