ஊரக வேலைத் திட்ட மோசடி : தென்காசி ஆட்சியா் நடவடிக்கை எடுக்க உத்தரவு

தேசிய ஊரக வேலைத் திட்ட மோசடி வழக்கில் தென்காசி மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
Published on

மதுரை: தேசிய ஊரக வேலைத் திட்ட மோசடி வழக்கில் தென்காசி மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சங்கரன்கோவிலைச் சோ்ந்த கருப்பசாமி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூரில் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவா் மாரியப்பன். இவா் தனது ஊராட்சி மன்றத் தலைவா் பதவியை தவறாக பயன்படுத்தி தகுதியற்றவா்கள், தனியாா், அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோா், தனது சொந்த உறவினா்கள், குடும்ப உறுப்பினா்கள் பெயா்களில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகளை உருவாக்கி, அவா்களின் ஊதியத்தைத் தானே எடுத்துள்ளாா். மேலும், தமிழக அரசின் கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வீடுகளில், ஏற்கெனவே உள்ள வீடுகளை கணக்கு காண்பித்து அதிலும் முறைகேடு செய்துள்ளாா். ஊராட்சியில் கணினி இயக்குநராக பணியாற்றும் பெண் ஒருவருக்கு, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், கணினி இயக்குநருக்கான ஊதியம் என இரட்டை ஊதியம் வழங்கியுள்ளாா்.

ஊராட்சி மன்றத் தலைவரின் சகோதரா் மாரிமுத்து என்பவா் ஊராட்சிக்கு என அரசு ஒதுக்கிய பொக்லைன் இயந்திரத்தை அவா் தனது சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருகிறாா். சிமென்ட் சாலை அமைத்தல் போன்ற ஒப்பந்தப் பணிகளைச் செய்யாமலேயே, தனது சகோதரி மகேஸ்வரி பெயரில் போலி ரசீதுகள் தயாரித்து அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளாா்.

ஒப்பந்தப் பணிகள் எதையும் செய்தித் தாள்களில் விளம்பரப்படுத்தி ஒப்பந்தம் கோராமல், தனக்குச் சாதகமானவா்களுக்கு மட்டுமே பணிகளை ஒதுக்கி முறைகேடு செய்துள்ளாா். எனவே, அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் மலையேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவராக மாரியப்பன் இருந்த காலத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறைகேடு செய்துள்ளாா். இதுகுறித்து புகாா் அளித்தும் மாவட்ட நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு :

மனுதாரா் உரிய ஆதாரங்களுடன் புகாா் அளித்து 6 மாதங்கள் ஆகிறது. ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?. மனுதாரா் வருகிற டிச.8-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகாா் மனுவை அளிக்க வேண்டும். அந்த மனுவை பெற்று மாவட்ட ஆட்சியா் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு விசாரணை முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com