சீமானுக்கு எதிராக டிஐஜி வருண்குமாா் தொடுத்த அவதூறு வழக்கு ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு எதிராக டிஐஜி வருண்குமாா் தொடுத்த வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானின் தூண்டுதலின் பேரில், என் மீதும், எனது குடும்பத்தினா் மீதும் அவதூறு கருத்துகளை சமூக வலைதளங்களில் அந்தக் கட்சியினா் பரப்புவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டிஐஜி வருண்குமாா் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கின் விசாரணை திருச்சி 4- ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது, சீமான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கமளித்தாா்.
இந்த நிலையில், டிஐஜி வருண்குமாா் தொடுத்த இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரி, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னா், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.
