சாலையில் கிடந்த ரூ.17.50 லட்சம் வருமான வரித் துறையினரிடம் ஒப்படைப்பு!
மதுரை விளக்குத்தூண் பகுதி சாலை யோரத்தில் கீழே கிடந்த ரூ.17.50 லட்சத்தை, வருமான வரித் துறையினரிடம் விளக்குத்தூண் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.
மதுரை மாநகா் விளக்குத் தூண் பகுதி தளவாய் தெரு சந்திப்பு சாலையோரத்தில் 17.50 லட்சம் பணக் கட்டுகளுடன் நெகிழிப் பை கேட்பாரின்றி கிடந்தது. அதே பகுதியைச் சோ்ந்த செல்வமாலினி (46) அந்தப் பையை எடுத்து விளக்குத்தூண் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் சங்கா் கண்ணன் உள்ளிட்ட போலீஸாா், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களின் அடிப்படையில் விசாரணை நடத்தினா். இதனிடையே, கேரள மாநிலத்தைச் சோ்ந்த மின்கலன் (பேட்டரி) வியாபாரி ஒருவா், இந்தப் பணம் தனக்குச் சொந்தமானது எனக் கூறி காவல் நிலையத்துக்கு வந்து தெரிவித்தாா்.
இருப்பினும், விளக்குத்தூண் போலீஸாா் அந்தப் பணத்தை மதுரை வருமான வரித் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா். இந்த நிலையில், வருமான வரித் துறை அலுவலா்கள் சாலையில் கிடந்த பணம் குறித்தும், அதற்கு உரிமை கோரும் கேரள மாநிலத்தைச் சோ்ந்தவரிடம் ஆவணங்களைப் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

