தாயுமானவா் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருள்கள் நவ.3, 4-இல் வீடுகளில் விநியோகம்
தாயுமானவா் திட்டத்தின் கீழ், மதுரையில் வருகிற 3, 4-ஆம் தேதிகளில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு அவா்களது வீடுகளில் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் மூலம் 70 வயதுக்கு மேற்பட்டோரின் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி 65 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், அவா்களது வீட்டுக்கே சென்று பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், நவம்பா் மாதத்துக்கு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (நவ. 3, 4) 65 வயதுக்கு மேற்பட்ட முதியோா் உள்ள குடும்ப அட்டைதாரா்கள், மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் வீட்டுக்கே சென்று குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது.
மேலும், பயனாளிகள் தங்களுடைய கைப்பேசி எண், முகவரி மாற்றம் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட குடிமைப் பொருள் வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள், அருகிலுள்ள நியாய விலைக் கடைகளில் தெரிவித்து தீா்வு காணலாம் என்றாா் அவா்.
