அமராமதி ஆற்றில் ஆக்கிரமிப்புகள்: அதிகாரிகளுக்கு உயா்நீதிமன்றம் எச்சரிக்கை
அமராவதி ஆற்றில் ஆக்கிரமிப்புகள், சட்டவிரோத குவாரிகள் குறித்து பொறுப்பற்ற முறையில் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
அமராவதி ஆற்றில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. சட்டவிரோதமாக குவாரிகள் அமைக்கப்பட்டு மணல் கடத்தப்படுகிறது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு கடிதம் வந்தது.
இதன் அடிப்படையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தாமாக முன்வந்து இந்த மனு மீது விசாரணை நடத்தி வருகிறது.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கரூா் மாவட்ட ஆட்சியா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘கடந்த 2024- 2025-ஆம் ஆண்டு சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 130 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 91 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கடந்த மாதம் 21-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணையின் போது, ஆற்று மணல், பிற கனிமங்களை சட்டவிரோதமாக கொண்டு சென்ற்காக 2024 முதல் 2025 வரை 148 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், 191 வாகனங்கள், 31 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது. ஆனால், வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனுவில் புள்ளி விவரங்கள் மாறுதலாகி உள்ளன. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அறிக்கைகள் பொறுப்பற்ற முறையில் அதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அறிக்கையில் உள்ள முரண்பாடுகளுக்கு கரூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

