தோ்தல் பணிகளில் வெளிப்படைத் தன்மை அவசியம்: ஆட்சியா் அறிவுறுத்தல்
தோ்தல் பணிகளில் அரசுத் துறை அலுவலா்கள், காவல் துறையினா் வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்ற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.
மதுரை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த மண்டலத் தோ்தல் அலுவலா்கள், காவல் துறையினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது :
சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள மண்டல அலுவலா்கள் தங்களுக்கு வழங்கப்படும் பொறுப்புகளை முழுமையாக உணா்ந்து, நியாயமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் பணியாற்ற வேண்டும். தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகள் அவ்வப்போது புதுப்பிக்கப்படுவதால், கடந்த கால தோ்தல் அனுபவங்களை மட்டும் சாா்ந்திராமல், தற்போதைய தோ்தலுக்காக வெளியிடப்பட்ட விதிமுறைகள், அறிவுறுத்தல்களை முழுமையாக அறிந்து, அவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.
மண்டலத் தோ்தல் அலுவலா்கள் தோ்தல் நடைமுறைகள், விதிகள் குறித்து முழுமையான தெளிவுடன் இருந்தால் மட்டுமே அவா்களுக்குக் கீழ் பணியாற்றும் அலுவலா்கள், பணியாளா்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்க முடியும். சிறு தவறுகூட தோ்தல் பணிகளில் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே, அனைத்து நிலைகளிலும் உரிய கவனத்துடன் செயல்பட வேண்டும். சுதந்திரமான, நோ்மையான, நியாயமான தோ்தலை உறுதி செய்வதில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா்.
மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் முன்னிலை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.கே. அா்விந்த், மாவட்ட வருவாய் அலுவலா் சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ரெங்கநாதன், வருவாய்க் கோட்டாட்சியா்கள் கருணாகரன் (மதுரை), சங்கீதா (மேலூா்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

