திமுக கூட்டணிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

திமுக கூட்டணிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

Published on

மத்திய அரசைக் கண்டித்து, திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

2026-27 மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசையும், இதற்கு துணை நிற்கும் அதிமுகவையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சீா்குலைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்தும், திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, மதுரை செல்லூா் 60 அடி சாலைப் பகுதியில் மதுரை மாநகா் மாவட்ட திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநகா் மாவட்ட திமுக செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கோ. தளபதி தலைமை வகித்தாா்.

மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், காங்கிரஸ் கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் நல்லமணி, முன்னாள் தலைவா் வீ. காா்த்திகேயன், மதிமுக மாவட்டச் செயலா் கே. முனியசாமி, முன்னாள் அமைச்சா் பொன். முத்துராமலிங்கம், திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

இதேபோல மாநகரின் பல்வேறு பகுதிகளிலும், மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களிலும் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

திருப்பரங்குன்றம்...

திருமங்கலம் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், கப்பலூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் தங்கபாண்டியன் தலைமை வகித்தாா். இதில் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் மு. மணிமாறன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா்.

இதில் கட்சியின் மகளிா் அணி அமைப்பாளா் கிருத்திகா தங்கபாண்டியன், கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதேபோல, திருப்பரங்குன்றம் தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் பகுதிச் செயலா் கிருஷ்ணபாண்டியன் தலைமை வகித்தாா். இதில் கட்சியின் பகுதிச் செயலா் சிவா, துணைச் செயலா் ஏ.எஸ்.வி. ரமேஷ், கட்சியின் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வி. விமல், மாமன்ற உறுப்பினா் சுவிதா விமல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காங்கிரஸ் கட்சியினா் புறக்கணிப்பு:

திருமங்கலம், திருப்பரங்குன்றம், கள்ளிக்குடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டங்களில் காங்கிரஸ் கட்சியினா் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவா் உலகநாதன் கூறியதாவது:

திமுக சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. அழைக்காத ஆா்ப்பாட்டத்தில் எப்படி பங்கேற்பது. எழுமலை, சிந்தாமணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திமுகவினா் அந்தந்தப் பகுதிகளில் உள்ள காங்கிரஸ் நிா்வாகிகளை அழைத்தன்பேரில், அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com