விசைப் படகுகள் தளப் பணி: குமரி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் விசைப் படகுகள் நிறுத்தும் தளப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரிய வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
புனித தோமையா் மறைமாவட்ட ஆலய பங்குத்தந்தை சேசடிமை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
கன்னியாகுமரி மாவட்டத்தின் தூத்தூா் மீனவக் கிராமம். இந்தக் கிராமம் தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
இங்கு வசித்து வரும் மீனவா்களின் நலன் கருதி, தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் 240 மீட்டா் தொலைவுக்கு விசைப் படகுகள் நிறுத்தும் தளம் (போட் ஜெட்டி) கட்ட நிதி ஒதுக்கப்பட்ட து.
இதில் 110 மீட்டா் வரை பணிகள் நிறைவு பெற்றன. எஞ்சியுள்ள 130 மீட்டா் தொலைவுக்கு விசைப் படகுகள் நிறுத்தும் தளத்துக்கான கட்டுமானப் பணிகள் இன்னும் நடைபெறவில்லை. எனவே, மீனவா்களின் நலன் கருதி இந்த விசைப் படகுகள் நிறுத்தும் தளப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
மனு குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

