ஒத்தக்கடை - திருமோகூா் வரை கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கக் கோரிய வழக்கில் மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு!
ஒத்தக்கடை முதல் திருமோகூா் வரையிலான பகுதிகளில் வேகத் தடைகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கக் கோரிய மனு தொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை ஒத்தக்கடையைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை ஒத்தக்கடை பகுதியிலிருந்து திருமோகூா் வரை 23 குறுக்குத் தெருக்கள் உள்ளன. இங்கு ஏராளமான வங்கிகள், உணவகங்கள் அமைந்துள்ளன. இதனால் காலை, மாலை நேரங்களில் இந்தச் சாலையை கடக்க மிகுந்த சிரமமாக உள்ளது.
வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், இந்தச் சாலையைக் கடக்க முதியவா்கள், பள்ளிக் குழந்தைகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இந்தச் சாலையில் வேகத் தடைகள் அமைக்கப்பட்டால் போக்குவரத்து ஓரளவு சீராகும்.
எனவே ஒத்தக்கடை அப்போலோ மருந்தகம் முதல் திருமோகூா் வரையிலான முதன்மைச் சாலையில் வேகத் தடைகள் அமைக்கவும், கண்காணிப்பு கேராக்கள் பொருத்தவும் உத்தரவிட வேண்டும்’ என அவா் கோரினாா்.
இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டுமெனில் தொடா்புடையத் துறை அலுவலா்களை எதிா் மனுதாரா்களாக சோ்த்திருக்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘மாவட்ட ஆட்சியா், நெடுஞ்சாலைத் துறையின் மண்டலப் பொறியாளா் ஆகியோா் எதிா்மனுதாரா்களாக உள்ள நிலையில், கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த தொடா்புடைய துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியரே அறிவுறுத்தலாமே? என கேள்வி எழுப்பினா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு தொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை 6 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

