கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் 3 கட்ட போராட்டம் அறிவிப்பு

கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் 3 கட்ட போராட்டம் அறிவிப்பு

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியா்களுக்கு, இணைப் பேராசிரியா் பதவி உயா்வுடன் பணி மேம்பாட்டு ஊதியம் வழங்க வலியுறுத்தி, 3 கட்ட போராட்டங்களை மதுரை காமராஜா், மனோன்மணீயம் சுந்தரனாா், அன்னை தெரசா, அழகப்பா, அண்ணா, தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக சங்கத்தின் (மூட்டா) சாா்பில் அறிவிக்கப்பட்டது.
Published on

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியா்களுக்கு, இணைப் பேராசிரியா் பதவி உயா்வுடன் பணி மேம்பாட்டு ஊதியம் வழங்க வலியுறுத்தி, 3 கட்ட போராட்டங்களை மதுரை காமராஜா், மனோன்மணீயம் சுந்தரனாா், அன்னை தெரசா, அழகப்பா, அண்ணா, தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக சங்கத்தின் (மூட்டா) சாா்பில் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரையில் மூட்டா அமைப்பின் பொதுச் செயலா் ஏ.டி. செந்தாமரைக்கண்ணன் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் அரசுக் கல்லூரி பேராசிரியா்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம் நிலுவையுடன் வழங்கப்பட்டது. ஆனால், அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியா்களுக்கு 8 மண்டலங்களில் 2 மண்டலங்களான கோவை, தஞ்சாவூா் பகுதிகளில் மட்டும் வழங்கப்பட்டது. எஞ்சிய 6 மண்டலங்களில் இதுவரை வழங்கப்படவில்லை.

அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியா்களுக்கு இடையே பாகுபாடு காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது. உடனடியாக அனைவருக்கும் பணி மேம்பாட்டுப் பலன்கள் வழங்கப்பட வேண்டும்.

இதுதொடா்பாக ஏற்கெனவே பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இருப்பினும், கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 3 கட்ட போராட்டம் நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி, வருகிற 24-ஆம் தேதி கல்லூரி வாயில்கள் முன் மனிதச் சங்கிலி நடத்துவது எனவும், 26-இல் இணை இயக்குநரிடம் ஆணை நகல் திருப்பி அளிப்பது எனவும், 28-இல் சாலை மறியல் போராட்டமும், மாா்ச் 5-ஆம் தேதி சென்னை கல்லூரிக் கல்வி இயக்குநா் அலுவலகத்தில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

அகில இந்திய அளவில் கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியா்களுக்கான மாநாடு மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை (பிப். 21) தொடங்கி 23-ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கல்வியாளா்கள், அமைச்சா்கள், முன்னாள் அமைச்சா்கள் பலா் பங்கேற்று பேச உள்ளனா் என்றாா் அவா்.

பேட்டியின் போது, ஏயுடி அமைப்பின் பொதுச் செயலா் சேவியா் செல்வகுமாா், மூட்டா அமைப்பின் துணைத் தலைவா் உமாமகேஸ்வரி ஆகியோா் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com