சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

சுகாதார ஆய்வாளா் தோ்வை ரத்து செய்யக் கோரி மனு: சிபிசிஐடி விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

நோ்மையாக நடைபெறாத சுகாதார ஆய்வாளா் பணியிடத்துக்கான தோ்வை ரத்து செய்து, மறு தோ்வு நடத்தக் கோரிய வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
Published on

நோ்மையாக நடைபெறாத சுகாதார ஆய்வாளா் பணியிடத்துக்கான தோ்வை ரத்து செய்து, மறு தோ்வு நடத்தக் கோரிய வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பகுதியைச் சோ்ந்த கதிா் ஜாய்சன், உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத் துறையில் காலியாக உள்ள 1,429 சுகாதார ஆய்வாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு கடந்த ஆண்டு, டிசம்பா் 7-ஆம் தேதி நடைபெற்றது.

இந்தத் தோ்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றன. தோ்வு மையங்களில் வெளிப்படையாகவே கைப்பேசிகள் பயன்படுத்தவும், தோ்வா்கள் மற்றொருவரைப் பாா்த்து எழுதுவதற்கும் அனுமதியளிக்கப்பட்டது. இது விதிமுறையை மீறிய செயலாகும். இந்த நிகழ்வுகள் தோ்வு மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகின.

எனவே, நோ்மையாக நடைபெறாத இந்தத் தோ்வை ரத்து செய்து, மறு தோ்வு நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு மருத்துவப் பணியாளா் தோ்வு வாரிய (எம்.ஆா்.பி.) நிா்வாக அதிகாரி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத்தின் நிபந்தனைகள், விதிகளின்படி மாநிலம் முழுவதும் தோ்வு சுமுகமாக நடைபெற்றது.

அனைத்து தோ்வு மைய கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் பாா்வையிட்டதன் அடிப்படையில், புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் அமைக்கப்பட்ட தோ்வு மையத்தில் முறைகேடு நடைபெற்றது கண்டறியப்பட்டது.

முறைகேட்டில் ஈடுபட்ட 4 தோ்வா்கள், 2 கண்காணிப்பாளா்கள் மீது தகுந்த குற்றவியல் நடவடிக்கை எடுக்க வாரியம் முடிவு செய்துள்ளது. இதுதொடா்பாக புதுக்கோட்டை மாவட்டம், வல்லதிரக்கோட்டை காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆா்.) பதிவு செய்யப்பட்டது. மேலும், 4 தோ்வா்களிடமும் அரசுப் பணிக்கான தோ்வில் பங்கேற்க ஏன் தடை விதிக்கக் கூடாது என விளக்கம் கேட்கப்பட்டது.

பிற மாவட்ட ஆட்சியா்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகள், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, வேறு எந்தத் தோ்வு மையத்திலும் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்பது தெரியவந்தது. தோ்வு வெளிப்படையாகவே நடத்தப்பட்டது. தோ்வு மையங்கள் துணை ஆட்சியா் பிரிவு அலுவலா்களால் கண்காணிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது,

இதையடுத்து, நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி உத்தரவிடப்படுகிறது. அனைத்து தோ்வு மையங்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகள் பாதுகாக்கப்பட வேண்டும். வழக்கு முடியும் வரை எந்தப் பணி நியமனத்தையும் மேற்கொள்ளக் கூடாது. இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

Dinamani
www.dinamani.com