பகவதியம்மன் கோயில் கல் மண்டபம் சீரமைப்பு: அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க உத்தரவு
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் கல் மண்டபத்தை சீரமைக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கன்னியாகுமரியைச் சோ்ந்த நாகராஜன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பழைமையான ‘கன்னியம்பலம்’ என்ற கல் மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபம் நம் முன்னோா்களின் கட்டடக் கலைக்கு சான்றாகத் திகழ்கிறது. திருவிழாக் காலங்களில் காலை, மாலை வீதி உலாவின் போது பகவதியம்மன் இந்த கல் மண்டபத்தில் எழுந்தருளுவது வழக்கம்.
இந்த நிலையில், கல் மண்டபத்தின் துாண், தரையைச் சேதப்படுத்தி கோயில் நிா்வாகம் கடைகளை அமைத்துள்ளது. இதனால், மண்டபத்தில் குப்பைகள் தேங்கியுள்ளன. இங்குள்ள விநாயகா் கோயில் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. குப்பைகள், கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், சுசீந்திரம் கோயில் இணை ஆணையா், கோயில் மேலாளா் ஆகியோருக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, கல் மண்டபத்தில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும். மேலும், பழைமை மாறாமல் மண்டபத்தை சீரமைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், கன்னியம்மபலம் மண்டபத்தில் இருந்த கடைகள், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கன்னியம்பலம் கல் மண்டபத்தை பழைமை மாறாமல் புதுப்பொலிவுடன் சீரமைக்க வேண்டும். தொல்லியல் துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பான அறிக்கையை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற மாா்ச் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

