அம்ருத் பாரத் ரயிலுக்கு வரவேற்பு
திருவனந்தபுரம்-தாம்பரம் அம்ருத் பாரத் ரயிலுக்கு மதுரை ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவனந்தபுரம்-தாம்பரம் அம்ருத் ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். அங்கிருந்து சிறப்பு சேவையைத் தொடங்கிய இந்த ரயில் மாலை 4 மணிக்கு மதுரை ரயில் நிலையத்துக்கு வந்தது.
அப்போது, மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா தலைமையில் ரயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, ரயிலில் உள்ள வசதிகளை அவா் ஆய்வு செய்தாா். முதுநிலை கோட்ட ரயில் இயக்க மேலாளா் ஆா். சிவா முதுநிலைக் கோட்டப் பொறியாளா் வி. சூரியமூா்த்தி, முதுநிலை கோட்ட வா்த்தக மேலாளா் டி. எல். கணேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா். பிறகு, மாலை 4.10 மணி அளவில் இந்த ரயில் புறப்பட்டுச் சென்றது.
வழக்கமான சேவை...
இந்த ரயிலின் வழக்கமான சேவை தாம்பரத்திலிருந்து புதன்கிழமை (ஜன. 28) தொடங்குகிறது. வாரந்தோறும் புதன்கிழமை மாலை திருவனந்தபுரத்திலிருந்து புறப்படும் இந்த ரயில் (16121) மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும். மறு வழித்தடத்தில் வியாழக்கிழமைகளில் காலை 10.40 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து புறப்படும் ரயில் (16122) இரவு 11.45 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.
இரு வழித்தடங்களிலும் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் நகா், குழித்துறை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதில் 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள், ஒரு சமையல் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும்.

