தனியாா் நிதி நிறுவன சொத்துகளை ஏலம் விட உயா்நீதிமன்றம் உத்தரவு
நியோமேக்ஸ் தனியாா் நிதி நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடங்கள், வணிக வளாகங்களை ஏலம் விட சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு திருச்சி, தஞ்சை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கிளை அலுவலகங்களும் இருந்தன. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்வோருக்கு கூடுதல் வட்டி, இரட்டிப்புப் பணம் வழங்கப்படும் எனக் கூறி, பல ஆயிரம் பேரிடமிருந்து நிதி பெறப்பட்டது.
ஆனால், வாக்குறுதிப்படி பணத்தைத் திருப்பித் தராமல் முதலீட்டாளா்களை ஏமாற்றி, பல ஆயிரம் கோடி மதிப்பில் நிதி முறைகேடு செய்ததாக இந்த நிறுவனம் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த நிறுவன இயக்குநா்கள் பலரும் கைது செய்யப்பட்டனா்.
இதனிடையே, இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்து, அதிலிருந்து கிடைக்கும் தொகையை முதலீட்டாளா்களுக்கு வழங்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பலா் மனுதாக்கல் செய்தனா்.
இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்ற உயா்நீதிமன்றம் ஏற்கெனவே பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. இந்த நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதி பரத சக்ரவா்த்தி முன் அண்மையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் தொடா்புடைய நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ. 6 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. நிதி முறைகேடு தொடா்பாக 60 ஆயிரம் புகாா்கள் பெறப்பட்டன. கையகப்படுத்தப்பட்ட சொத்துகள் நிலங்கள், விடுதிகள், வணிக வளாகங்கள், பிற கட்டுமானங்கள் என வகைப்படுத்தப்பட்டது. இதில் முதல் கட்டமாக ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான வணிக வளாகங்களை பொது ஏலம் விட உத்தரவிடப்படுகிறது. வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

