கொடைக்கானலில் வனத்துறை சார்பில் சுற்றுலாவை மேம்படுத்த மரங்களுக்கு இடையே சென்று இயற்கை அழகை ரசிக்கும் 'ட்ரீ வாக்' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது கொடைக்கானல் வனப் பகுதி, மோயர்பாயிண்ட் பகுதியில் தமிழகத்திலேயே முதல் முதலாக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் "ட்ரீ வாக்' அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரங்களுக்கு இடையே சென்று இயற்கை அழகை ரசிக்கும் வகையில் ட்ரீவாக் அமைக்கப்பட உள்ளதாக வனத்துறை ரேஞ்சர் ரவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக வனத்துறை சார்பில் ஃ பைன் பாரஸ்ட் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் ட்ரீ வாக் அமைக்கப்பட உள்ளது. மேலும் பண்ணைக்காடு- தாண்டிக்குடி செல்லும் வழியில் உள்ள ஆதிவாசிகளின் வாழ்விடம் (கற்குகை) சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் ஏற்கெனவே வனத்துறை சார்பில் உள்ள இயற்கை எழில் காட்சி இடங்களை பார்க்க நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் பேரிஜம் வனப் பகுதியில் ஸ்கை வாக் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாக அத்திட்டம் நிறைவேற்றப்பட வில்லை. தற்போது ஃபைன் பாரஸ்ட் பகுதியில் ட்ரீ வாக் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானலில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு ஒவ்வொரு அதிகாரிகளும் திட்டங்களை அறிவித்து வருகின்றனர். அத்திட்டங்கள் அறிவிப்புகளாகவே இருந்து வருகின்றன. எனவே திட்டங்களை செயல்படுத்தி கொடைக்கானல் சுற்றுலாவை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.