தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை மீறும் அரசு ஊழியர்களை தாற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்ய முடியும் என ஓய்வு பெற்ற தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் க.கபிலன் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் பெ.சந்திரா தலைமை வகித்தார். கருத்தரங்கில் பங்கேற்ற அரசு ஊழியர்களுக்கு, ஆட்சி மொழி சட்டம் குறித்து க.கபிலன் விளக்கம் அளித்து பேசியதாவது:
வரலாறு தொடங்கிய காலம் முதல் தமிழ் ஆட்சி மொழியாக இருந்துள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது ஏற்பட்ட அலுவல் நடைமுறைகளால் ஆங்கில சொற்கள் புழகத்தில் வந்துள்ளன. 30 நாள்கள் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என எந்த சட்டம் இல்லை. ஆனால், ஆட்சி மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.
தமிழக மக்களின் வரிப் பணத்தில் ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள், வரி செலுத்தும் மக்களுக்கு தெரிந்த மொழியில் அலுவல் நடைமுறைகளை பின்பற்றுவதற்கு எவ்வித தயக்கமும் இருக்கக் கூடாது. மொழி உணர்வு இருந்தால் மட்டுமே, ஆட்சி மொழியாக தமிழை நாம் நிலை நிறுத்த முடியும். கணினியில் இணக்கமாக பயன்படுத்தக் கூடிய மொழிகளில் ஆங்கிலத்துக்கு அடுத்த இடத்தில் தமிழ் மொழியே உள்ளது.
காவல்துறையினர் அதிக அளவில் ஆங்கிலத்தை பயன்படுத்தி கோப்புகளையும், பதிவேடுகளையும் பராமரித்து வருகின்றனர். அடுத்த இடத்தில் மருத்துவர்கள், விடுப்பு எழுதுவது முதல் அனைத்திற்கும் ஆங்கிலத்தை பயன்படுத்துகின்றனர். ஆட்சி மொழி சட்டத்தை மீறுவோருக்கு, ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட பணப் பலன்களை நிறுத்தி வைக்க முடியும். குறிப்பாணையை மீறி செயல்படும் ஊழியர்களை தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யவும் சட்டத்தில் இடமுள்ளது என்றார்.