வத்தலகுண்டு அடுத்துள்ள கணவாய்பட்டி பஸ்ட்ஸ்டெப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் விநாடி- வினா போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
இதில் பட்டிவீரன்பட்டி, வத்தலக்குண்டு, திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர். இக்கண்காட்சியினை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக கூடுதல் தேர்வாணையர் பி.ரவி, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு பள்ளித் தாளாளர் தங்கமுத்து தலைமை வகித்தார். செயலர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். விழாவில் கூடுதல் தேர்வாணையர் ரவி பேசியதாவது: குழந்தைகளின் மதிப்பெண் பட்டியலை மட்டுமே உற்றுநோக்குவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். மேலும் குழந்தைகளிடம் உள்ள தனித் திறனை கண்டறிந்து அதனை மேம்படுத்த துணை நிற்க வேண்டும். செயல்முறை பயிற்சியின் மூலம் மாணவர்களின் நினைவாற்றல் மேம்படும் போது, மதிப்பெண்கள் இயல்பாகவே உயர்ந்துவிடும் என்றார்.
அறிவியல் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் வினோத், ரியா, குருதேவி ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.