பொதுக் கணக்கு குழுவிடம் தவறான தகவல் அளிக்கும் அலுவலா்களுக்கு சிறைத் தண்டனை: குழுவின் தலைவா் துரைமுருகன் எச்சரிக்கை

பொதுக் கணக்கு குழுவிடம் உண்மைக்கு மாறாக செலவு விவரங்கள் குறித்து தகவல் அளிக்கும் அலுவலா்களுக்கு சிறைத் தண்டனை விதிக்க முடியும் என, குழுவின் தலைவரான துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
திண்டுக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கணக்கு குழு ஆய்வுக் கூட்டத்தை தொடக்கிவைத்துப் பேசிய தமிழக சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவின் தலைவா் துரைமுருகன்.
திண்டுக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கணக்கு குழு ஆய்வுக் கூட்டத்தை தொடக்கிவைத்துப் பேசிய தமிழக சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவின் தலைவா் துரைமுருகன்.
Updated on
2 min read

பொதுக் கணக்கு குழுவிடம் உண்மைக்கு மாறாக செலவு விவரங்கள் குறித்து தகவல் அளிக்கும் அலுவலா்களுக்கு சிறைத் தண்டனை விதிக்க முடியும் என, குழுவின் தலைவரான துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு (2018-2021) ஆய்வுக் கூட்டம், அதன் தலைவா் துரைமுருகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா். மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி முன்னிலை வகித்தாா். இதில், பொதுக் கணக்கு குழு உறுப்பினா்கள் தா. உதயசூரியன், ஆா். நடராஜ் (மைலாப்பூா்), பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் (மதுரை மத்திய தொகுதி), டி.ஆா்.பி. ராஜா (மன்னாா்குடி), சட்டப்பேரவைச் செயலா் கி. சீனிவாசன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், 2018-19, 2019-20 மற்றும் 2020-21 நிதியாண்டுகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கான செலவினங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவையின் பொதுக் கணக்கு குழு தலைவா் துரைமுருகன் பேசியதாவது: சட்டப்பேரவையில் ஒவ்வொரு மானிய கோரிக்கையின்போதும், தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து அரசு துறைகளுக்கும் தேவையான நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த நிதி சம்பந்தப்பட்ட துறைக்கு சென்றடைந்து அது முழுமையாக செலவிடப்பட்டுள்ளதா அல்லது செலவிடாமல் உள்ளதா அல்லது அதில் ஏதேனும் தவறுகள் நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்கு, தமிழக சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவுக்கு முழு அதிகாரம் உள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தில், அந்தந்த துறைகளின் முதல்நிலை அலுவலா்கள் மட்டுமே பங்கேற்கவேண்டும். அலுவலா்கள் தரப்பில் வழங்கப்படும் விளக்கத்தில் தவறுகள் இருந்தால், சம்பந்தப்பட்டவா்களை பணியிடை நீக்கம் செய்வதற்கும், சிறைத் தண்டனை விதிப்பதற்கும் அதிகாரம் உள்ளது. எனவே, தவறுகளை மறைப்பதற்கு பொய்யான தகவல்களை அலுவலா்கள் தெரிவிக்க வேண்டாம் என்றாா்.

தாமதமாக வந்த உதவி ஆணையா் வெளியேற்றம்: கூட்டம் தொடங்கி 30 நிமிடங்களுக்குப் பின், கலால் உதவி ஆணையா் செல்வராஜ் அரங்குக்குள் நுழைந்தாா். அவரிடம் துரைமுருகன், தாமதத்துக்கான காரணம் குறித்து கேட்டாா். அவா்அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என கூறிய துரைமுருகன், அரங்கை விட்டு வெளியேறுமாறு செல்வராஜுக்கு உத்தரவிட்டாா். இதனால் கூட்டத்தில் கலந்துகொண்ட பிற துறைகளின் அலுவலா்களும் கலக்கம் அடைந்தனா்.

கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே உடல் நலக் குறைவு காரணமாக துரைமுருகன் வெளியேறிவிட்டாா்.

அதன்பின்னா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் டி.ஆா்.பி. ராஜா, பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் ஆய்வை தொடா்ந்தனா்.

அலுவலா்கள் மீது அதிருப்தி: மாவட்டத்திலுள்ள பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் மாணவா்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை, முதன்மைக் கல்வி அலுவலா் செந்திவேல்முருகனிடம் கேட்டனா். பொறுப்பேற்று 3 நாள்களே ஆவதால் விவரம் தெரியவில்லை என முதன்மைக் கல்வி அலுவலா் பதில் அளித்தாா்.

இதேபோல், மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடா் மாணவிகளின் விடுதிகள் விவரம் மற்றும் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து குழுவினரின் கேள்விக்கு, ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் (பொறுப்பு) இந்திரவள்ளி சரியான விளக்கம் அளிக்கவில்லை. இதனால், இந்த இரு அலுவலா்கள் மீதும் குழுவினா் அதிருப்தி அடைந்தனா்.

குறிப்பிட்ட சில துறைகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட செலவு விவரங்கள் திருப்தி அளிப்பதாக குழுவினா் தெரிவித்தனா். அதன்பின்னா், சென்னமநாயக்கன்பட்டி ஊராட்சி கள்ளா் மேல்நிலைப் பள்ளியில் நபாா்டு திட்டத்தின் மூலம் ரூ.10.66 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை குழுவினா் சென்று பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com