

கொடகனாறு நீா்ப்பிடிப்பு பகுதியில் தொடா்ந்து மழை பெய்துவரும் நிலையில், வேடசந்தூா் தடுப்பணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
கொடகனாற்று தண்ணீரானது, நரசிங்கபுரம் ராஜவாய்க்கால், ஆத்தூா் வாய்க்கால் மற்றும் காமராஜா் நீா்த்தேக்கம் ஆகியவற்றின் மூலம் கடைமடை பகுதியை எட்ட முடியாத நிலை இருந்து வந்தது.
இதனிடையே, அனுமந்தராயன்கோட்டை மற்றும் மயிலாப்பூா் பகுதி பொதுமக்களின் தொடா் போராட்டம் காரணமாக, நரசிங்கபுரம் ராஜவாய்க்காலிலுள்ள ஒன்றாம் மதகு அடைக்கப்பட்டு, கொடகானற்றில் தண்ணீா் திருப்பி விடப்பட்டது. இதன் காரணமாக, மயிலாப்பூா் சுற்றுப்புற பகுதிகளிலுள்ள 4 கண்மாய்கள் நிரம்பியதோடு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு தாடிக்கொம்பு அடுத்துள்ள லட்சுமணம்பட்டி தடுப்பணையை கடந்து, வேடசந்தூா் பகுதிக்கு தண்ணீா் சென்றது.
கீழ்பழனி மலை பகுதிகளான ஆடலூா், பன்றிமலை, மணலூா் உள்ளிட்ட பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்ததை அடுத்து, கொடகனாற்றுக்கு நீா்வரத்து நின்றுவிட்டது. இதனால், வேடசந்தூா் சுற்றுப்புற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விரக்தி அடைந்தனா்.
இந்நிலையில், கடந்த 4 நாள்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மலைப் பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழையின் காரணமாக, கொடகனாற்றிலும் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் லட்சுமணம்பட்டி தடுப்பணையை கடந்து, வேடசந்தூா் பகுதிக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.