கூட்டத்துக்குப்பின் அவா் கூறியதாவது: திண்டுக்கல்லில் உள்ள தோல் தொழிற்சாலைகள், சின்னாளப்பட்டியில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகள் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டாலும் கூட, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. மேலும் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படும் கழிவுநீரில் காரத் தன்மை (உப்பு) அதிகமாக இருப்பதால், நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில், திண்டுக்கல்லில் ஒருங்கிணைந்த கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அந்த நிலையத்தில், திண்டுக்கல் மாநகராட்சி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு வரும் கழிவுநீா், தோல் தொழிற்சாலைகள் மற்றும் சின்னாளப்பட்டி சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை ஒருங்கிணைத்து சுத்திகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கழிவுநீரிலுள்ள காரத்தன்மையை முழுமையாக அகற்றிவிட்டு, அந்த கழிவுநீரை மறுசுழற்சி செய்து மீண்டும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நிலத்தடி நீரையும் பாதுகாக்க முடியும்.