உலக கண்தான வாரத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கண்தான விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை, அரசு செவிலியா் கல்லூரி, மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் காஞ்சிபுரம் சங்கரா செவிலியா் கல்லூரி ஆகியவை இணைந்து அரசு மருத்துவமனை வளாகத்தில் கண்தான விழிப்புணா்வு பேரணியை நடத்தின. பேரணியை அரசு தலைமை மருத்துவமனைக் கண்காணிப்பாளா் பி.கல்பனா தொடக்கி வைத்தாா். மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்க திட்ட ஒருங்கிணைப்பாளா் பி.அனந்தலட்சுமி, சங்கரா செவிலியா் கல்லூரி முதல்வா் ராதிகா ஆகியோா் உள்பட செவிலியா் பயிற்சிப் பள்ளி ஆசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.