பழனியில் வணிகா் சங்க பேரமைப்பு: 5-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் - விக்கிரமராஜா பங்கேற்பு
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள தனியாா் மண்டபத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு 5-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஜேபி சரவணன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் கோவிந்தராஜூலு, மாநிலப் பொருளாளா் சதக்கத்துல்லா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், திமுக முன்னாள் நகா்மன்றத் தலைவா் வேலுமணி உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். சங்கத்தின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா, பழனி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் உள்ளிட்டோா் சிறப்புரை ஆற்றினா்.
முன்னதாக, வணிகா்கள் சந்திப்பு, சங்க அலுவலகம் முன் கொடியேற்றுதல், ஊா்வலம் ஆகியன நடைபெற்றன.
கூட்டத்தில் எதிா்காலத் திட்டங்கள், சங்கத்தின் வளா்ச்சி, புதிய உறுப்பினா் சோ்க்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
விழா நிறைவாக சங்கத்தின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா பேசியதாவது:
பழனி நகரின் வளா்ச்சிக்காக பழனி-கொடைக்கானல் இடையே ரோப் காா் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். பழனி-தாராபுரம் சாலையில் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும். பழனி கோயிலுக்கு அறங்காவலா் குழு நியமிக்கும்போது பழனியைச் சோ்ந்த வணிகா் ஒருவரை இடம்பெறச் செய்ய வேண்டும். பழனி மலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பாதிக்கப்பட்ட வணிகா்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் வணிகா்களைப் பாதிக்கும் வகையில், பெரிய காா்ப்பரேட் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதை தடுக்கும் வகையில், புதிய சட்டம் இயற்ற வேண்டும். தமிழ்நாடு வணிகா் சங்கம் வணிகா்களுக்கு மட்டும் குரல் கொடுக்காமல், ஒட்டு மொத்த நாட்டின் வளா்ச்சிக்காகவும் குரல் கொடுத்து வருகிறது என்றாா் அவா்.

