பழனி மலையில் கோயில் காளையுடன் படியேறிய பக்தா்கள்!
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, விவசாயம் செழிக்க வேண்டி பழனி மலை கோயிலில் காளையுடன் பக்தா்கள் படியேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
பழனியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) தைப்பூசத் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. வருகிற 4-ஆம் தேதி தெப்பத் தோ் உலாவுடன் விழா நிறைவுபெறவுள்ளது.
இந்த நிலையில், தைப்பூசத் திருவிழாவின் ஏழாம் நாளான திங்கள்கிழமை பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அங்குள்ள வீரக்குமாா் கோயில் காளையுடன், ஆறுமுகக் காவடி எடுத்து பாத யாத்திரையாக வந்து, மலையேறி சுவாமி தரிசனம் செய்தனா்.
இதுகுறித்து கிராமத்தினா் கூறியதாவது: நாட்டில் விவசாயம் செழிக்கவும், அமைதி நிலவவும் எங்கள் கோயில் காளையை குங்குமம், சந்தனம், பூக்களால் அலங்கரித்து, மேள தாளங்களுடன் மலையேற்றிச் செல்வோம். தரிசனத்துக்குப் பிறகு காளையை யானைப் பாதை வழியாக கீழே அழைத்துச் செல்வோம் என்றனா்.

